31 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர்-14

ஶ்ரீஅரவிந்தர்- 14 (காஷ்மிர்)

"எண்ணங்களை அமைதிப்படுத்துவதே யோகம் எனப்படும்" என்று யோகத்திற்கு வரையறை செய்கிறார் பதஞ்சலி முனிவர்.

எல்லா யோகங்களின் நோக்கமும் ஒன்றே! எண்ணங்களை அழித்தல் அல்லது நிறுத்துதல்.

"எண்ணமே மனிதனின் முதல் எதிரி; எண்ணத்திலிருந்தே எல்லா பிரச்னைகளும் தோன்றுகின்றன" என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி.

மவுனமாய் இருத்தல் எண்ணங்கள் இல்லாத நிலையாஇல்லவே இல்லை! மவுனமாய் இருக்கும் போதும் எண்ணங்கள் உற்பத்தியாகிக் கொண்டேதான் இருக்கும்மவுனத்தில் உணர்வை நுழைத்து அங்கேயே தங்கும் போது  எண்ணங்கள் நீங்கிவிடும், அதுவே மாமவுனம் எனப்படுகிறது.
இந்த மாமவுனநிலையை அறிய முடியுமா? அரவிந்தருக்கு இந்த நிலையை அறிய உதவியது அவருடைய காஷ்மிர் விஜயம்.

பரோடா மகாராஜா  ஒருமுறை காஷ்மிருக்குச் செல்ல விரும்பினார். உடன் அரவிந்தரையும் வரும்படிப் பணித்தார். அப்போதுதான் திருமணம் செய்து கொண்டிருந்த அரவிந்தர் தன் மனைவியுடனும், சகோதரியுடனும் 1903 ஆம் ஆண்டு காஷ்மிர் சென்றார்

அங்குள்ள ஶ்ரீநகரில் சங்கரர் குன்று உள்ளது.
(Takht-e- Suleiman, THRONE OF Solomon)  என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இக்குன்று 'கோபதாரி' என்னும் பெயரும்,1000 அடி உயரமும் உள்ளது. ஆதிசங்கரர் இவ்விடம் வந்ததால்  சங்கரர் குன்று எனப்படுகிறது. புத்தர்கள் இக்குன்றை புனிதமாகக் கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் சீக்கியர்கள் ஆண்ட போது இங்கே சிவலிங்கம் பதிக்கப்பட்டது.

இக்குன்றின் மீது ஏறுவதே ஒருபுதிய அனுபவத்தைக் கொடுக்கும். ஒவ்வோர் இடத்திலிருந்தும் காட்சிதரும் இயற்கையின் கைவண்ணம்  தன்னை மறக்கச் செய்யும். இக்குன்றில் ஏறி அதன் விளிம்பில் நின்ற அரவிந்தருக்கு வெட்ட வெளியில் பிரம்மத்தை உணர்ந்த அனுபவம் ஏற்பட்டது. வானம் முழுதும் வெண்மையான மேகங்கள் கண்ணுக்கு எட்டும் தூரம் முழுதும் பரந்திருக்க சுத்த சைதன்யத்தின்,
 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றேயான பரம்பொருளின் அனுபவத்தை அரவிந்தர் பெற்றார்.எண்ணங்கள் அடங்கி, மனம் ஆன்மாவில் நிலையுற்ற தவசீலர்களுக்கே இவ்வனுபவம் வாய்க்கும் என்கிறது திருவருட்பா!"பரசிவம் சின்மயம் பூரணம்" எனத்தொடங்கும் திருவடிப் புகழ்ச்சியில் இவ்வனுபவத்தைப் பெறலாம்.
இவ்வனுபவத்தை"அத்வைதம் " என்ற கவிதையால் வெளிப்படுத்துகிறார் ஶ்ரீ.

இதன்பின் தீவிரமாக அரசியலில் ஈடுபட்ட அரவிந்தருக்கு  சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குப் பின் தன்னத்தான் அறியும் யோக வாழ்வில் மீண்டும் நாட்டம் ஏற்பட்டது. எனவே தன் சகோதரர் பாரின் உதவியுடன் 'லேலே' என்ற யோகியை சந்திக்கிறார் அரவிந்தர்

( யோகா, மனம், காஷ்மிர், சங்கராச்சார்யர் குன்று, அத்வைத அனுபவம்,லேலே)













23 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் - 13


பிராணாயாமம் / மூச்சுப் பயிற்சி

பிராணாயாமம் என்பது வடமொழிச் சொல்.
ப்ராணன் - என்றால் உயிர்க்காற்று.
அயாமம்என்றால் கட்டுப்படுத்துதல்.
மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக கால அளவோடு சுவாசிக்கும் பயிற்சியே ப்ராணாயாமம்.
மூச்சுப் பயிற்சியால் என்ன பயன்?
ஆயுள் நீடிக்கும்
நோய் நொடி அகலும்,
மூளை புத்துணர்ச்சி பெறும்
ஞாபக சக்தி  அதிகரிக்கும்
படிப்பாற்றல், புத்திசாலித்தனம் கூடும்.

பிராணாயாமம் பற்றிய மற்ற செய்திகள் நமக்குத் தேவையில்லை எனவே ஶ்ரீஅரவிந்தர் பிராணாயாமம் பற்றி என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்.

நர்மதை நதிக்கரையில் உள்ள ஊர் 'சாந்தோத்'. அங்கு வசித்தவர் ஸ்வாமி பிரம்மாநந்தா. அவருடைய சீடர் 'தேவ்தர்' என்பவர். அவரிடம் அரவிந்தர் பிராணாயாமம் பற்றிய செய்திகளைக் கேட்டறிந்தார். பிராணாயாமம் செய்யாமல் யோகா கற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு அபிப்ராயம் இருந்தது. இருக்கிறது.
ஆனால் "தன்னை அறியும் "முயற்சிக்கு அது ஓரளவுதான் உதவுகிறது என்பது அனுபவ உண்மை! அரவிந்தர் சொல்கிறார்,

" பரோடாவில் இருக்கும்போது நான் பிராணாயாமம் கற்றுக்கொண்டேன். ஒரு நாளைக்கு காலையில் மூன்று மணி , மாலயில் மூன்று மணி நேரம் பயிற்சி செய்வேன். அதனால் என் மனம் மிகுந்த அறிவாற்றலுடனும்சக்தியோடும் வேலை செய்ததுஎன் மூளையில் ஒளியும், மின் அதிர்வுகளும் ஏற்பட்டன. பிராணாயாமப் பயிற்சிக்கு முன் ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து வரிகள் கவிதைகள் எழுதுவேன்
பிராணாயாமம் செய்ய ஆரம்பித்தபின் அரை மணி நேரத்தில் இருநூறு வரிகள் எழுதும் திறமை வளர்ந்தது. சர்வ சாதாரணமாக தடங்கலின்றி, கட்டுக் கோப்பாக வார்த்தைகள் அமைந்தன
என் உடல் நல்ல ஆரோக்யம் பெற்றது. நான்கு ஆண்டுப் பயிற்சிக்குப் பின் நான் அரசியல் வேலைகளால் இப்பயிற்சியைக் கை விடும்படி நேர்ந்தது."

அடுத்து நம் அறிவுக்கு எட்டாத  யோகசக்தியின்  மேன்மையை எவ்வாறு அறிந்தார் என்பதைக் காணலாம். அரவிந்தரின் சகோதரர் பாரின் (Barin). இவர் அன்னை பவானிக்குக் கோயில் எழுப்ப ஓர் இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக விந்திய மலைக் காடுகளில் சுற்றினார். அதனால் அவருக்கு மலைக் காய்ச்சல் ஏற்பட்டது. எந்த மருந்தும் சிகிச்சையும் பலனளிக்காத அந்த சமயத்தில் ஒரு நாக சன்னியாசி வந்தார். அவர் பாரினைத் தன்னால் குணப்படுத்த முடியும் என்றார். ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டு வரச்சொன்ன அவர் அந்தத் தண்ணீரின் மேல்  ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே கத்தியால் குறுக்குக்கோடு வரைந்தார். அந்தத் தண்ணீரை பாரின் அருந்தும்படிச் செய்தார். மறுநாள் பாரினின் காய்ச்சல் குணமானதுஆக யோகசக்திக்கு பலனுண்டு என்பதை உணர்ந்தார் அரவிந்தர்.

அடுத்து குஜராத் மாநிலம், நர்மதை நதிக்கரையில் உள்ள சாந்தோத்  (chandod) என்னும் ஊருக்கு அரவிந்தரும் நண்பர்களும் சென்றனர் அங்கு யோகி பிரம்மானந்தரின் ஆசிரமம் உள்ளது. அங்கு வரும் பக்தர்கள் அவரை நமஸ்கரிக்கும் போது எப்போதும் அவர் கண்கள் மூடியபடி தான் இருக்கும்! ஆனால் அரவிந்தர் அவரை வணங்கச் சென்றபோது அவர் தன் அழகிய கண்களைத் திறந்து ஏதோஅற்புதத்தைக் கண்டார் போலும்  வியந்து நோக்கினார்.

நர்மதை நதிக்கரையில் ஒரு காளி கோயில் உண்டு. அங்கு நண்பர்களோடு சென்றார் அரவிந்தர். அவருக்கு கடவுள் நம்பிக்கையும், உருவ வழிபாடும் விருப்பமானதல்ல. உண்மையில் அவர் உருவ வழிபாட்டை வெறுத்தார். அன்று அவர் அந்தக் கோயிலில் நுழைந்ததும் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றார்.ஆம், அங்குள்ள காளியின் உருவம் உயிரூட்டப்பட்ட ஒன்றென அவருக்குக் காட்சியளித்ததுதன் அனுபவத்தை ஒரு கவிதையாக வடித்தார்.

"புனிதமான 
நர்மதை நதி,
கரையில்
காளியின்  ஆலயம்!,
 உள்ளே நான் 
கண்டதென்ன?
கல்லோ,  
சிற்பியின் 
கை வண்ணமோ
கல்லல்ல
அவள்
உயிரோடு காண்,
முகமலரில் ஓர் சக்தி,
ஊடுருவும் பார்வை!
இதயத்தில்
கணநேரத்தில் 
அன்னை முகம்!"( இது மொழி பெயர்ப்பு அல்ல)

இந்த அனுபவத்தால் உருவ வழிபாட்டின் உண்மையை அவர் உணர்ந்தார்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் பவதாரிணியின் சிலை உயிர்த்தெழுந்ததைக் கண்டாரல்லவா?

(அரவிந்தர், ஆன்மிகம், பிராணாயாமம்,நாகசன்னியாசி, சாந்தோட் காளி,சுவாமி பிரம்மானந்தா)












16 Jul 2017

ஶ்ரீஅரவிந்தர் -12
 இதுவரை ஶ்ரீ அரவிந்தர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்  உணர்ச்சியூட்டும் எழுத்துக்களால் கொண்டுவந்த தேசியவாதம், சுதேசி இயக்கம், பூரணசுதந்திரக் கொள்கை ஆகியவற்றைப் பார்த்தோம்

இனி அரவிந்தரின் மறுபக்கத்தைப் பார்ப்பது இங்கே அவசியமாகிறது. இவ்வளவு தீவிரமாக இந்திய தேசமே தன் தாய், தேசிய விடுதலையே தன் உயிர் மூச்சு, தனக்கென்று தனிப்பட்ட உலக வாழ்வே இல்லையென்று வாழ்ந்த அரவிந்தர் ஏன் சுதந்திரப் போராட்டக் களத்திலிருந்து திடீரென விலகினார்? ஏன் பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்குத் தலைமறைவாகச் சென்றார்
அலிப்பூர் சதி வழக்கில் அரவிந்தரின் பங்கு என்ன? இவற்றை அறிந்து கொள்ளுமுன் 
நாம் மீண்டும் அவரது ஆன்மிக வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பார்ப்போம்

1872 ல் பிறந்த அரவிந்தர் 1877 ஆம் ஆண்டு  பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். 1893ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். பம்பாய்த் துறைமுகத்தில் இறங்கிய அவர் உள்ளத்தில் அதுவரை இருந்த இருள்நீங்கி, பரிபூரண அமைதி நிலவிற்று. ஒரு தாயின் அன்பு நிறைந்த அணைப்பின் ஆனந்தமும், அமைதியும் அவரை ஆட்கொண்டன.

தெய்விக அனுபவங்கள் அவர் வாழ்வின் ஒரு பகுதியாயிற்று.
"தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவனின் வாழ்வில் தெய்வம் ஒரு பகுதியாகி, அவனை வழி நடத்துகிறது. " 

பரோடா வந்த அரவிந்தரும் இந்திய அரசியல், மற்றும் சமூக வாழ்வினை நன்கு புரிந்து கொண்டார். ஆகவே இரண்டு அம்சங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாதது என உணர்ந்தார்ஒன்று தாய் நாட்டின் சுதந்திரம். இரண்டு மனித வாழ்வை பக்குவமாக்க, யோக வாழ்வை சரியான நேரத்தில் ஆரம்பித்து அதில் வெற்றியடைதல்.

முதலில் யோகா என்றால் என்ன என்பதை அறியலாம்.  'யுஜ்' என்னும் சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து தோன்றியது 'யோகா' என்ற சொல். ஒவ்வொரு தனி மனிதனின் ஆன்மா, பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிணைதல்  யோகம்சுமார் ஐயாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவே 'யோகா'. தன்னுள் எப்படி எத்தகைய  நல் ஒழுக்கங்களைக் கடைப் பிடித்தால் பிரபஞ்ச சக்தியை அறியலாம் என்பதைக் கற்றுத் தருவத்தே யோகா

உலகம் தோன்றிய நாளிலிருந்து தன்னுடையபிறப்பையும்அதன் காரணத்தையும் அறிய முயலுகிறது மானுடம். அந்த ஆராய்ச்சியின் பயனாகத் தோன்றியதே யோகா. ஆசனங்கள் செய்வதோ, மூச்சுப் பயிற்சி செய்வதோ யோகா அன்று. அவை யோக வாழ்வின் முதல் இரண்டு படிகள் மட்டுமே

சிக்கல்கள் நிறைந்த அற்புத இயந்திரமே மனித உடல். அந்த உடலை ஆள்வது மனம். உட்சக்தியாக மறைந்து விளங்குவது ஆன்மா. ஐம்புலன்களாகிய யானையை மனமெனும் அங்குசத்தால் அடக்கி, தன்னை அறிய முயல்வதே ஆன்ம தரிசனம். அதுவே மனிதப்பிறவியின் நோக்கம்!

பரோடா சமஸ்தானத்தில் வேலைக்கு சேர்ந்த அரவிந்தருக்கு குதிரைகள் பூட்டிய வண்டி ஒன்று பயணம் செய்யக் கொடுக்கப்பட்டிருந்தது
ஒரு நாள்........
அவர் பயணம் செய்த வண்டிக்கு விபத்து நேர இருந்தது. ஆனால் அது தடுக்கப்பட்டது. எப்படியென்பதையும் தன் அனுபவத்தையும் ஒரு கவிதையில் பதிவு செய்துள்ளார் ஶ்ரீஅரவிந்தர்

"நடனமிடுவதைப்போல குதிரைகள் குளம்படிச் சப்தம் எழுப்ப
கூச்சல் நிறைந்த சாலையைத் தாண்டி,
நான் பயணித்த வண்டி ஆபத்தை எதிர் நோக்கியது.
குளிர்ச்சி பொருந்திய சோலையுள் நுழைந்தார்போலும் 
என்னைத் தழுவி அணைத்துக் கொண்டது இறைவனுடைய உடல்.

என் தலைக்குமேல் சக்தி வாய்ந்த அமைதி நிறைந்த முகம் கண்டேன்
எல்லையற்ற பெரு வெளியில் அமரத்துவம் திகழும் 
அந்த ஊடுருவும் பார்வையின் மேன்மையை உணர்ந்தேன்.

சூரிய ஒளியாய் மின்னும் குழற்கற்றைகள் மென் காற்றோடு அசைய
உலகத்தையே தன் இதயத்தில் தாங்கியவனாய் இருந்த அவனே நானாகக் கண்டேன்
அழிவற்ற தேவனின் சக்தியை
என்றென்றும் நிலைத்து நிற்கும் பூரண அமைதியை 
என் இதயக் கோயிலில் குடிவைத்தேன்.

கண நேரத்தில் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பின.
அந்தக் கணத்தின் நினைவுகள் மட்டும் 
அழியாமல் என்னுள்ளே நிலைத்து நிற்கிறது."

இந்த நிகழ்ச்சி நடந்த போது  கடவுள் என்றால் யார்தெய்விக சக்தி என்றால் என்ன என்பதையெல்லாம் நான் அறியவில்லை. தேஷ்பாண்டே என்பவர் அந்த நாட்களில் யோகாசனங்களும், மற்றும் பல யோக சாதனைகளும் செய்து வந்தார். என்னையும் ஈடுபடச் செய்ய வேண்டும் என்று விரும்பினார், ஆனால் உலகைத் துறக்கும் யோக சாதனைகளை நான் விரும்பவில்லைஎன்னுடைய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற தாகமே என் வாழ்வின் ஒரே நோக்கமாக இருந்தது.

ஆனால் இதே யோக சாதனைகள் ஒருவனின் உடலுக்கு வலிமையையும், மனதுக்கு அளப்பரிய ஆற்றல்களையும் வழங்க வல்லதென்று நான் அறிந்து கொண்ட போது
அந்த யோக சக்தியை என் நாட்டின் விடுதலைக்கு வழி வகுக்கும் கருவியாக ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது  என்று எண்ணினேன்.

ஏதோ ஒரு சக்தி என்னை யோக வாழ்வில் ஈடுபடும்படிச் செய்தது.

யோக வாழ்வில் அரவிந்தரை ஈடுபடச் செய்த நிகழ்வுகளை அடுத்த பதிவில் காணலாம்.

(ஶ்ரீஅரவிந்தர், யோகா,பெயர்க் காரணம், பரோடா அனுபவம், அறிமுகம்...)