24 Jul 2014

Dish Washer!

இந்த வேலம்மா வருகிற வழியைப் பார்த்து கண்ணே வலி எடுத்துவிட்டது பர்வதத்துக்கு. ஆயிற்று மணி பதினொன்று! இனிமேல் இவள் வந்து பாத்திரம் தேய்த்து மிச்ச வேலையெல்லாம் முடிக்க ஒரு மணி ஆகிவிடும். வரவில்லையென்றால் இருக்கிறது  தேய்க்கக் கையும், வலிக்க முதுகும், பிறகு மாத்திரையும், புலம்பல்களும்!   ஒரு வண்டிப் பாத்திரங்கள்! 

சாதாரணமாக பத்து மணிக்கு வந்துவிடுவாள் வேலம்மா. வரமாட்டா போல என கன்னத்தில் கையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் வாசல் கேட் திறக்கும் சப்தம் இனிமையாகக் கேட்டது. வேலம்மாதான்! அம்மா உடம்பு முடியல,ஜொரம். அதுதான் ஏதாவது மாத்திரை இருந்தால் வாங்கிட்டு, சொல்லிட்டு போவலாம்னு வந்தேன்.

சூடா காப்பியும், மாத்திரையும் தரேன். பாத்திரம் மட்டும் செஞ்சுடும்மா, என்றாள் பர்வதம்.
சரிம்மா, நாளைக்கு முடிஞ்சாதான் வருவேன்.

இரவு எல்லாரும் சாப்பிட்டபின் பாத்திரம் தேய்க்க ஆரம்பித்தவளை,
''சீக்கிரம் வா. உன்னோட சீரியல் ஆரம்பம். என்ன செய்யறே," என்று கேட்ட துரையை முறைத்தாள் பர்வதம். "ஏம்மா  நாளை வேலம்மா வரமாட்டாளா?" என்று கரிசனத்தோடு கேட்டார் அவர்.

ஆமாம், அவளுக்கு உடம்பு சரியில்லே. நாளைக்கு வரமாட்டேன்னா. இந்த வாரம் பூரா மட்டம்னுதான் நினைக்கிறேன்..........................
என்னங்க, நான் சொன்னா காதிலயே போட்டுக்க மாட்டீங்க. போனவாரம் சரோஜா வீட்டில பாத்திரம் தேய்க்கிற ''டிஷ் வாஷர்'' வாங்கியிருக்காங்க. நான் பாத்தேன். எவ்வளவு நல்லா பாத்திரம் எல்லாம் பள பளன்னு புதுசு கணக்கா ஆயிடிச்சு தெரியுமா! வாங்கிக் குடுத்தா என்னவாம்?

"அது என்ன வெலை தெரியுமா உனக்கு? ரொம்ப சுலபமா சொல்லிட்டே! 47,000 ரூபாயாம். சரோஜா புருஷன் சொன்னார். மாசம் வேலம்மாக்கு 500 ரூபாய் சம்பளம். வருஷத்துக்கு 6000/-  மிஷினுக்கு?........மிஷின் வேஸ்ட்." என்றார் துரை.  இந்த மிஷின் எத்தனை நாள் உழைக்குமோ, எத்தனை ரிப்பேர் வருமோ? ரிப்பேர் செய்யற ஆளுக்கு 'போன்'போட்டே என் உயிர் போயிடுமில்ல!  

இதோ பாரம்மா, தள்ளி நில்லு, நான் வேணா நாலு நாள் லீவு போட்டுட்டு பாத்திரம் கழுவறேன் என்றார்.

"இதுல ஒன்னும் கொறச்சல் இல்ல, எதுக்கெடுத்தாலும் கணக்கு," என்று முகம் திருப்பினாள் பர்வதம்.

வேலம்மாக்கு 'டெங்கு' காச்சல், வரமுடியல. வேற ஆளுங்களும்  சரிப்பட்டுவரல! ஒன்னா நேரம், இல்ல சம்பளம், என்னதான் செய்யமுடியும்?

 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்' என்பதற்கேற்ப துரையும் விட்டுக் கொடுத்தார். 
அடுத்ததாக கடைகளுக்குப் படையெடுப்பு நடந்து விலை, உயரம், அகலம் இத்யாதி விவரங்கள் எல்லாம் கேட்டு வாங்கி, அலசி ஒருவழியாக ஒரு மிஷினைத் தேர்ந்தெடுத்தார்கள். 

பர்வதத்திற்கு மகாசந்தோஷம். அப்பாடா இனிமேல் வேலம்மாவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். இரவு சாப்பாடு ஆனால் எல்லா பாத்திரங்களையும் மிஷினுக்குள்ளே அடுக்கி விட்டால் அது பாட்டுக்குத் தேய்த்துவிடும். 
ஆக, ஒரு சுபயோக சுபதினத்தில் ஜாம்ஜாமென்று வந்து இறங்கியது ''டிஷ் வாஷர்.'' கூடவே தேய்க்க  உப்பு, பொடி, லிக்விட்........! சமையலறையில் பிரதான இடத்தில் அதை பிரதிஷ்டை செய்தார்கள். ஆரத்தி எடுக்காத குறைதான் போங்கள்! வந்த அன்று பாத்திரங்கள் அப்படி இப்படி என்று  எப்படியோ அடுக்கப்பட்டு பர்வதத்தால் "ஸ்விட்ச் ஆன்" செய்யப்பட்டது. அடடா பாத்திரங்கள் எல்லாம் பளபளக்கின்றன என்று எல்லோரும் வாய் பிளந்தார்கள்!

ஒரு வாரம் ஆயிற்று! என்னம்மா சந்தோஷமா? மிஷின் நல்லா வேலை செய்யுதா? என்றார் துரை. 
ம்..ம்.. என்றாள் பர்வதம். அவர் போனவுடன், என்ன மிஷினோ என்று முணுமுணுத்துக் கொண்டாள். 

பாத்திரங்களை எல்லாம் அப்படியே உள்ளே வைக்க முடிவதில்லை. அடி பிடித்தவை, பால் பாத்திரங்களின் ஆடைகள், எல்லாவற்றையும் நன்றாக சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்தாலே பாதி தேய்த்தாகி விடுகிறது. அதற்கு மேலே சும்மா மிஷின் இருக்கிறதே என்று போட வேண்டியிருக்கிறது.  பாத்திரங்களை எல்லாம் ஊற வைத்து, ஒருமுறை கழுவி மிஷினுக்குள் போடுவதற்கு பதில் நாமே தேய்த்துக் கொண்டிருக்கலாம்! என்ன செய்வது ? சரோஜா இந்த விஷயத்தை எல்லாம் சொல்லவே இல்லையே!இதை வீட்டுகாரர் கிட்ட சொன்னா என்ன ஆகும்? சும்மா இருப்பதே சுகம் என்று பேசாமல் ஆகிவிட்டாள் பர்வதம்.

அழைப்பு மணி அடிக்கிறது. அவள் சினேகிதிதான். வா பங்கஜம், வாங்க ரத்னம்மா, என்று வரவேற்றாள் பர்வதம். நீயும் என்னவோ பாத்திரம் தேய்க்கிற மிஷின் வாங்கிட்டியாமே? சரோஜா சொன்னாங்க! நல்லா இருக்கா? எத்தனை பாத்திரம் வைக்கலாம்? குக்கர் தேய்க்க முடியுமா? எங்க வீட்டிலும் இந்த முனியம்மா சரியாவே வரதில்ல. ஒரு மிஷின் வாங்கிக் குடுங்கன்னு சொல்லியிருக்கேன். அதுதான் விஷயம் தெரிஞ்சுகிட்டுப் போகலாம்னு வந்தேன் என்றாள் பங்கஜம்.

ஆமாங்க மிஷின் வாங்கிட்டேன். சூப்பரா இருக்கு. நல்லா எல்லா பாத்திரமும் பள பளன்னு மின்னுது.
வேலை மிச்சம். தேய்ச்ச பாத்திரத்தையெல்லாம் துடைக்க வேண்டாம். அதுவே சுடசுட காய வெச்சு குடுத்துடுது. ரொம்ப நல்லாருக்கு என்றாள் பர்வதம் மனதுக்குள் சிரித்துக் கொண்டே!பிரச்னைகளைச் சொன்னால், 'பாத்தியா நாம்பளும் வாங்கிடுவோம்னு பொறாமைக்காக பொய் சொல்கிறாள்'  என்று நினைப்பார்கள். 

வாங்கிவிட்டால் அவர்களும் கெளரவமாக எங்க வீட்டில 'டிஷ் வாஷர் ' இருக்கிறது என்று பெருமைப் பட்டுக் கொள்வார்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!




























6 Jul 2014

உறவுகள்-1

விடியற்காலையில் எழுந்திருக்கும் கெட்ட பழக்கம் போய் நாட்கள் பல ஆயின! இரவின்  அமைதியில்  தடைகள் இல்லாமல் புத்தகங்கள் வாசிப்பதும், பகலில் தூங்குவதும் காலையில் எழுவதற்குப் பகை.
இதற்குப் பரிகாரம் தேட முடியாது, வேலைக்கா போகிறோம் என்று வாழ்க்கையை சித்தம் போக்கு சிவன் போக்கு என்று விட்டாயிற்று! சுதந்திரப் பறவைக்கு எதுக்கு இந்தப் புலம்பல் என்கிறீர்களா? என் இனிய காலைத் தூக்கம் கெட்டுப் போச்சுங்க!

காலை ஏழுமணி!

ஒரே கூச்சல் சப்தம் கேட்கிறது. பக்கத்து வீட்டுப் பெரியவர்தான் சத்தம் போடுகிறார். நீ நாசமாப் போ, என்று பெற்றபிள்ளையை ஊரெல்லாம் கேட்க சபிக்கிறார். பையன் பதிலுக்குக் கத்த, இவர் மீண்டும் ஓலமிட இடையே மருமகளின் குரல் கேட்கிறது. என்னவோ ஏதோ என்று அவர்கள் வீட்டு நாய் கூட்டணியில் சேர்ந்து தன் மொத்த சக்தியுடன் 'லொள்ள', அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். சூழ்நிலை புரிய சிறிது நேரமானது. இனிமேல் தூங்க முடியாது! காது கொடுக்காவிட்டாலும் சத்தம் கேட்கத்தான் செய்யும்.
நல்ல விடியல் போங்கள்!
பெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும்.  தினந்தோறும் மாலையில் கொஞ்சம் தண்ணி போட்டுவிட்டு,
பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு வருவதை வாழ்க்கையின்  முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தார்! மனைவி பரலோகம் போய் பத்து வருடம் இருக்கும். சொந்த வீடு. ஒற்றைக்கு ஒரு பிள்ளை. அவனுக்கும் கல்யாணம் ஆகி 7 வயது மகன் இருக்கிறான். மருமகள் வீட்டைப் பார்த்துக் கொள்ள வேலையை விட்டுவிட்டு குடும்பத்தலைவி ஆகிவிட்டார்! பிறகென்ன கவலை?

மனிதர்களுக்கு ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுக்கத்தான் செய்கிறான். ஆனால் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்களை யார் என்ன செய்ய முடியும்?

பெரியவரின் பையன் பெயர் ராமன். மனைவி கல்யாணி. ராமனுக்கு  மாலை நான்கு மணிமுதல் இரவு 2 மணி வரை வேலை. வேறே வேலை கிடைத்தால்தானே?

ஒருநாள் இரவு குடி போதையில் பெரியவர் ராமனின் படுக்கை அறைக் கதவைத் தட்டி கலாட்டா செய்துவிட்டார். வரவேற்பறை முழுதும் வாந்தி, நாற்றம்! சிவந்த கண்களும், பிதற்றலும், அரைகுறை ஆடையும் கல்யாணிக்கு ஒரே அதிர்ச்சி. இனிமேல் இங்கே இருக்க முடியாது என்று சொல்லிவிட்டாள்.

கடைசிவரை பெரியவர் தான் அப்படி செய்ததாக ஒத்துக் கொள்ளவே இல்லை. பதிலுக்கு............
"நான் ஒன்றும் அப்படி செய்யவில்லை, வெட்கம் மானம் இல்லாதவனா நான்? எவ்வளவு பொய் சொல்றீங்க. இனிமேல் கல்யாணி சமைத்த உணவைக் கூட சாப்பிட மாட்டேன். நானே எனக்கு வேண்டியதை சமைத்துக் கொள்வேன். யாரை நம்பியும் நான் இல்லை. உங்களுக்கு இங்கே இருக்க இஷ்டமில்லையென்றால் 'கெட் அவுட்'.  இது என் வீடு, போடா" என்று சொல்லிவிட்டார் பெரியவர்.
அன்றிலிருந்து மருமகளுக்கும், மாமனுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது.

தனியே போக ராமனுக்கும் ஆசைதான். ஆனால் ஒரு கோடி பெருமானமுள்ள வீடு? அப்பா அதை விற்றுவிட்டால், அடமானம் வைத்துவிட்டால்! இன்னொரு  வீடு வாங்கவாமுடியும்? வீட்டு உரிமைப் பத்திரங்கள் எல்லாம் அப்பாவிடம்! என்ன செய்வது?
பொறுத்தார் வீடு ஆள்வார்! 

இடையில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். பிரசவத்துக்குப் போன கல்யாணி மூன்று வருடங்கள் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள். ராமனுக்கு சாப்பாடும் அங்குதான்.
மூன்று வயது பையனை பள்ளியில் சேர்த்த போது மீண்டும் புகுந்த வீடு வந்த கல்யாணியிடம் ராமன் சொன்னார், ''இதோ பாரும்மா, காலையில் எட்டு மணிக்குள் நமக்குத் தேவையான சமையலை செய்துவிடு. எட்டு மணிக்கு மேல் அப்பா அவருக்கு வேண்டியதை செய்து கொள்ளட்டும். இன்னும் இந்தக் கிழம் மரத்திலிருந்து இறங்கல. வயதாகிவிட்டது, இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறார்? அட்ஜஸ்ட் பண்ணிக்க.  குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டு அம்மா வீட்டுக்குப் போ. திரும்ப நாலு மணிக்கு குழந்தையோடு இங்கே வா. எனக்கு வேண்டியதை செய்து கொடு. இரவு நான் வந்து விடுவேன். ப்ளீஸ்......." என்றான்!
முதியோர் இல்லத்தில் பெரியவரை கட்டாயப்படுத்தி சேர்க்கலாம்தான். காசு யார் கொடுப்பது? இன்றைய முதியோர் இல்லங்களிலும் வீட்டு வாடகை மாதிரி மாதம் பத்தாயிரம் பணம் இல்லாவிட்டால் முடியாதே!?

வேலைக்கார அம்மா மாலை வந்து பாத்திரம் கழுவி தனித்தனியே வைத்துவிடுவார். 

ஒரே சமையலறையில் இருவர் தனித்தனி சமையல். கல்யாணி இரவு உணவை அம்மாவீட்டிலிருந்து கொண்டு வந்து விடுவாள். ஏதோ ஒரு நாள் தெரியாத்தனமாக பெரியவர் சமையலறையில் காலை எட்டு மணிக்கு முன் புகுந்து விட்டால் வீடு ரெண்டுபடும்.

எத்தனை நாள் தான் அம்மாவீட்டில் எட்டு மணி நேரம், புருஷன் வீட்டில் மிச்ச நேரம் என்று கழிப்பது?கல்யாணிக்கு பிரமாதமான ஒரு ஐடியா வந்தது.
"இதோ பாருங்க, அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க, ஏன் உங்கள பகல் நேரத்தில பாக்க முடியறது இல்லன்னு கேட்கறாங்க. எத்தனை நாள்தான் உங்க அப்பாவுக்கு பயந்துகிட்டு என்னை அம்மாவீட்டுக்கு அலைய விடுவீங்க? என்னாலும் முடியலைங்க. நான் இந்த வீட்டு மருமக இல்லையா?  பேசாம கொஞ்சம் லோன் போட்டு மாடியில வீடு கட்டுங்க. என்னப் பெத்தவங்களும் உதவி செய்வாங்க. பையனும் வளர்ந்துட்டான். அவனுக்குன்னு ஒரு ரூம் வேணும்.  நானும் இங்கேயே இருந்துடுவேன். எங்க அம்மா அப்பாவும்  பொண்ணுக்கு விடிவு காலம் வந்துச்சுன்னு சந்தோஷப் படுவாங்க." என்றாள்

ராமனுக்கும் அது நல்லதாகப் பட்டது. முதலில் மறுத்த பெரியவரிடம், கட்டி வாடகைக்கு விட்டால் மாதம் பத்தாயிரம் வாடகை கிடைக்கும், செலவுக்கு ஆகும் என்று சொன்னதால் சரின்னுட்டார். ரகசியம் என்னவென்றால் பெரியவரிடம் ஒன்றும் அத்தனை பணம் கிடையாது. அவ்வப்போது  ராமனிடம்தான் வாங்கிக் கொள்வார்.
 வீட்டுப் பத்திரத்தைக் காட்டி 'வங்கி' லோனும் வாங்கியாயிற்று. மாடியில் இரண்டு அறைகள், வரவேற்பறை, சமையலறை. அழகான சிறுவீடு!
புதுமனை புகு விழாவன்று பெரியவர் திருப்பதியில்!வந்தவர்கள் குடிப்பழக்கத்தைப் பற்றிக் கேட்டுவிட்டால் என்ன செய்வது? முதல் நாளே போய் விட்டார். திரும்ப வந்து நான்கு நாட்களில் மகன் மாடிக்கு குடித்தனம்  போனதும் பெரியவருக்கு கோபம் வந்திருக்க வேணும். வாடகையும் வராது, வீட்டுப் பத்திரமும்  கை மாறிவிட்டது!அதுதான் காலை சுப்ரபாதம்.

வயதான காலத்தில் பெரியவர் பிள்ளை, மருமகள், பேரன் என்று சந்தோஷமாக இருக்கக்கூடாதா?
குடிப்பழக்கம் எதற்கு?
பிள்ளை ராமன்தான் அப்பாவிடம் நல்லதனமாக நாலுவார்த்தை பேசக் கூடாதா?
மருமகள் பெற்ற தகப்பனைப் போல நினைத்து மரியாதையாக நடத்தக்கூடாதா?
முதுமையில் தனிமை கொடுமை!

இப்போதெல்லம் பேரன் அடிக்கடி சத்தம் போட்டுக் கத்துகிறான். அம்மாவிடம் வாதாடுகிறான்.  எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்குடும்பம் ஒரு முன்னுதாரணம். பல குடும்பங்களில் மாமியார் இல்லையென்றால் நல்லதாயிற்று என்று கல்யாணம் செய்துவிடுகிறார்கள்! அங்கும் ப்ரச்சினைகள்தான்.

ஒரு வாரமாக வீடு அமைதியாக இருந்தது. முக்கியமாக என் காலைத் தூக்கம் கெடவில்லை.

இன்று காலை ஒரு பத்து மணி இருக்கும். இரண்டு டாக்சிகள் வாசலில் வந்து நிற்கும் சப்தம்! யார் வருகிறார்கள் நம் வீட்டிற்கு என்று வாசலுக்குப் போனேன். இடது பக்கமாக இறங்கிய பெரியவர் வலது பக்கம் வந்து பின் கதவைத் திறந்தார். மெதுவாக இறங்கினார் ஒரு மூதாட்டி. வயது சுமார் அறுபது இருந்தாலும் ஆரோக்யமாகத்தான் தெரிந்தார். புதுச் சேலை, கழுத்தில் கருமணிச் சரம், தலையில் பூ, நெற்றியில் பொட்டு! டிரைவர் ஒரு பெட்டியை இறக்கி கீழே வைத்தார். இன்னொரு டாக்சியில் நண்பர்கள் போலும்!  அப்போ நாங்க வருகிறோம் என்று விடை பெற்றுக் கொண்டனர்.

பெரியவர் முகத்தில் புன்னகை. வீட்டு சாவி ஒருகையிலும், பெட்டி மறு கையிலும்!
தயங்கித் தயங்கி உள்ளே வந்த அந்த அம்மாள் திகைத்து நிற்கும் ராமனையும், கல்யாணியையும் பார்த்து கை குவிக்கிறார்.
இனிமேலாவது குடிக்காமல் இருந்தால் சரி!
இந்த வயதில் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்! பாவம் அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து சொல்வதைக் கேட்கவாவது துணை வேண்டும் என்று தோன்றியிருக்கும் போல!

நாளைக் காலை அகர்பத்தி வாசனையோடு  வெங்கடேச சுப்ரபாதம் கேட்கும் என்று நம்புகிறேன்!


Courtesy: Google images