31 Dec 2012

ஜோதி!


ஜோதி!
இதமான குளிர் வருடும் அந்தக் காலைப் பொழுதில்
'அம்மா, வருகிறேன்,' என்றவள், மீண்டும்  அருகே  சென்று
கட்டிக்கொண்டாள். ஏனோ அன்று போகத் தயக்கம்!
மதியம் சாப்பிட உனக்குப் பிடித்த உணவு வைத்தேன்,
மறக்காமல் சாப்பிடு என்ற அம்மாவுடன், அப்பாவும்
வந்தார் வழியனுப்ப!
திரும்ப வரப்போவதில்லை என்பதை அறியாதவளாக,
கண்மணியவள்  கையசைத்துப் போனாள்!
மாலை வந்தது, நண்பனும் வந்தான், வேலை முடிகையில்
இரவும் வந்தது!
துஷ்டத்தனத்தின் உச்சியில் நின்று, வன்முறைசெய்யும்
பாவியரான துச்சாதனரை ஏந்தி வந்தது, பேருந்து.
வெறித்தனத்தில் அறிவிழந்து அறுவர் செய்த
ராட்சதத் தனத்தை எழுதவும் கூடுமோ?
எழுதினால் என் கணிணியும் கண்ணீர் சிந்தும்!
ஜோதி!
ஒளியிழந்து போனாள்!
ஒளிவீசும் மெழுகுவத்தியின்
சுடர்காத்துப் பரிதவிக்கும் பெண்டிர்களின் கூட்டம்!
பாரதமே விழித்தெழுந்து அவள் விழித்தெழுதல்
வேண்டி, அழுவார், ஐயோ என்பார், அவள் உயிர்
காப்பீர் தெய்வமே எனத் துடிதுடிப்பார்.
பாதுகாப்பு, பெண்களுக்கு அளிக்காத அரசு
இருந்தென்ன, போயென்ன? நீதி வேண்டும்,
வன்முறையில்  பெண்டிர்தனை வீழ்த்தும்
கயவர்களைத் தண்டிக்கும் சட்டம் இங்கே
வேண்டும்!
பட்டதுயர் போதுமென்றே பரிந்தழைத்து,
பாவையவள் கரம்பிடித்து இட்டமுடன்
போனான், ஜோதியவன், ஜோதியோடு!

அவளோ பாரதத்தின் பெண்ணானாள்,
அனைவருக்கும்  உறவானாள்,
வரலாற்றில் வாழ்ந்திடுவாள்!

அவள் அறியாள், அவள் மரணம் ஒரு
விழிப்புணர்வின் ஜனனம்!








23 Dec 2012

ஹனுமத் ஜெயந்தி



வசந்தநகர் அநுமன் ஆலயம் அமைதியான சூழ்நிலையில், வானளாவி வளர்ந்துள்ள மரங்களுக்கு நடுவே உள்ளது. சிறப்பான பராமரிப்பு. அருளலைகளின் சக்தியை ஆழ்ந்து தியானம் செய்வோர் உணரமுடியும்.

அஞ்சனா தேவிக்கும், வாயுவுக்கும் மகனாய் அவதரித்தவர் மாருதி. ஆஞ்சனேயன், அநுமன் என்ற பெயர்களும் அவருக்கு உண்டு. இராமாயணம், மஹாபாரதம் இரண்டிலுமே இடம் பெற்றிருப்பவர் அநுமன். வட இந்தியர்கள் அநுமனை சிவனின் அவதாரமாகக் கருதுகிறார்கள்.

சுந்தரகாண்டத்தின் கதாநாயகன் அநுமன்.   இராமாயணத்தின் இதயம் எனக் கருதப்படும் ஐந்தாவது பகுதி,  இராமனின் சுந்தர வடிவை அநுமன் வாயிலாகச் சொல்வதாலும், கற்புக்கரசியான சீதாப்பிராட்டியின் மனப்பண்பின் அழகை வடித்துக் காட்டுவதாலும், சுந்தரன் என அழைக்கப்படும் அநுமனின் உயர் பண்புகளைக் காட்டுவதாலும் சுந்தர காண்டம் என அழைக்கப்படுகிறது.

சாந்துணைப் போதும் மாறாத பக்தி, பணிவு, வீரம், விநயம், சாதுர்யம், புத்தி கூர்மை, உடல் வலிமையோடு  கூடிய மன வலிமை, ஆகியவற்றுக்கு இலக்கணமாய்த் திகழும் அநுமன் சுந்தர காண்டத்தின் தொடக்கத்தில் மகேந்திர மலை மீது விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு கடலைத் தாண்டிச் செல்லத் தயாராக நிற்கின்றான்.  

அவன் கண்கள் அப்போது தேவர்களது உலகைக் காண்கிறது. அப்படியென்றால் அந்த உருவம் எத்தனை உயரமாக இருக்க வேண்டும்?! பின் அது விண்ணுலகம் என அறிந்து மீண்டும் கண்களால் துழாவுகிறான். வெகு தொலைவில் இலங்கை மா நகரம் கண்ணுக்குத் தென்படுகிறது. அது மட்டுமா? அந்தப் பழமையான நகரத்தின் வட்டமான கோட்டைச் சுவர், கோபுர வாயில், மாட வீதிகள், சோலைகள், பொன்னாலான மதிலின் பகுதிகள் ஆகியவற்றைக் காண்கிறான். எட்டுத்திக்கும் அதிர தோள்களைத் தட்டி ஆரவாரம் செய்கிறான் என்கிறார் கம்பர்.

கூகுள் வரைபடத்தைப் பார்த்து அதிசயிக்கிறோம். கண நேரத்தில் உலகின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பார்க்கிறோம்.  இமயம் முதல் இலங்கை வரை வழித்தடம்  தெரிந்து கொள்கிறோம்.  அறிவியல் முன்னேறாத காலம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற ராமாயண காலத்தில் தொலை தூரத்தில் இருந்த இலங்கையை, அதன் எல்லாப் பகுதிகளையும் அநுமன் பார்த்ததாகக் கம்பன் சொல்கிறார் என்றால் எத்தனை அதிசயமாக இருக்கிறது?
'கூகுளுக்கு'  முன்னோடி கம்பரும், அநுமனும்தானே?

கம்பனின் கற்பனை வளத்தைப் பாருங்கள்! அநுமன் தாவிச் செல்லத் தயாராக இருந்த போது, கால்களால் மகேந்திரமலையை அழுத்துகிறானாம்! மலையானது கீழே அழுந்தியதால் வயிறு கிழிந்து குடல் பிதுங்கியது போல் பொன்னால் அமைந்த மலைக்குகைகளிலிருந்து பாம்புகள் வெளிவந்தனவாம்!

சிங்கங்கள் மலைக் குகைக்குள் நெரிந்தன. பறவைக் கூட்டங்கள் மேலெழுந்து பறந்து சூரிய ஒளியே தெரியாதவாறு வானை மறைத்தன. யானைகள் அஞ்சி துதிக்கைகளால் மரங்களைச் சுற்றித் தழுவின. புலிகள் கண் திறவா குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு ஓடின. அன்னப் பட்சிகள் அருவி போலக் கீழே விழுந்தன.

மூவரும் தேவரும் மலர் மாரி பொழிந்து வாழ்த்தி நிற்கின்றனர். வாலை வேகமாக வீசி, கால்களை மடக்கி, மார்பை ஒடுக்கி, இரு தோள்களும் பொங்கிப் பூரிக்க, கழுத்தை உள்ளுக்கிழுத்து முன் தள்ளி,  காற்றுப் போல் வேகத்தை உண்டாக்கி  மேல் நோக்கித் தாவி, வேகமெடுத்து வானில் ஒரு கருடனைப் போலப் பறக்கலானான் அனுமன். ஒரு சிறு அசைவைக் கூட விட்டு விடாமல் எத்தனை அழகாக வானில் பறக்கும் வித்தையைக் கம்பர் காட்டுகிறார்! 

இது ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில், ஓட்டப் பந்தயத்துக்கு  தயாராக ஒருகாலை மடக்கி, ஒருகால் நீட்டி,  கழுத்தை முன் துருத்திக் காட்சியளிக்கும் வீரர்களை நினைவு படுத்துகிறது இல்லையா?

வானில் பறந்த அநுமன் திரிகூடமலையும், கயிலையங்கிரியும் பறந்தது போலவும், புட்பக விமானம் போலவும் காட்சியளித்தானாம். வட திசையில் முழுநிலவும், சூரியனும் உதித்தது போல இருந்ததாம் தெற்கு நோக்கிச் சென்ற அநுமனின் தோற்றம். 

பல தடங்கல்களையும் கடந்து,  இலங்கையின் பழைய நகரத்தினைச் சார்ந்த, பவழ மலையில் கால் பதித்தான் அநுமன். தேவர் உலகத்தை ஒத்த இலங்கைமா நகரினைக் கண்டு வியந்து, பின்னர் உள் புகுந்து சீதா தேவியைத் தேடலானான். எள் தங்கும் சிறிய இடமும் விடாமல் தேடி, சீதாதேவியைக் காணாமல்  வருந்தி பறவைகள் தங்கும்  விமானம் போல் இருந்த அசோக வனத்தைக்கண்டு உல்ளே புகுந்தான்.                      

அங்கே வெயிலில் வைத்த விளக்குப் போல ஒளியிழந்து, மயிலின் சாயலும், குயிலின் இனிய இளஞ் சொற்களும் உடைய சீதாதேவி புலிக் கூட்டத்தில் சிக்கிய மானைப் போல் அரக்கியர்  நடுவே  சோகமே உருவாய் இருக்கக் கண்டான். 

இராவணன் வந்து செல்வதையும், தேவி தன்னை மாய்த்துக் கொள்ளத் தயாரானதையும் பார்த்த அநுமன் அரக்கியரைத் தன் மாயையால் உறங்கச் செய்து, பிராட்டியின் முன் தோன்றினான். 'காய்க்கதிர்ச் செல்வன் மைந்தன்' சுக்ரீவன், அவன் மந்திராலோசனைக் குழுவில் நானும் ஒருவன், பெயர் அநுமன் எனத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு இராமனின் கட்டளையால் பிராட்டியைத் தேடி வந்ததையும்  கூறினான்.

உண்மையாகவே இவன் ராம தூதனா அல்லது இராவணனின் ஏமாற்று வித்தையா என அறியும் பொருட்டு சீதா தேவி, 'இராமபிரானின் திருமேனி எப்படித்து' என வினவுகிறாள் என்கிறார் கம்பர்.
அநுமன் சொல்கிறான், தாயே இராமபிரானை நான் எவ்வாறு வர்ணிப்பேன்? ''படியெடுத்து உரைத்துக் காட்டும் படித்தன்று'. என்று சொல்லி திருவடி முதல் திருமுடி ஈறாக உள்ள அங்க லட்சணங்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான்.


 ஶ்ரீ இராமபிரானின் திவ்ய தரிசனத்தை அநுமன் வாய்வழிக் காண்போம்!

பாய்ந்தோடும் அலைகளையுடைய  கடலில் தோன்றும்  பவழமும் குவளைப் பூப் போல நிறங் குன்றிக் கருத்துக் காட்சி அளிக்கும் அளவுக்கு ஒளிவீசும் சிவந்த திருவடிகள்,

கற்பக மரத்தின் அரும்புகளுக்கும், இளம் பவழக் கொடிக்கும் ஒப்பிட முடியாத, காலையில்
உதித்த சூரியனின் இளங்கிரணங்களைப் போலப் பொலியும் கால் விரல்கள்,

நிலவொளியும், ஒளிவீசும் வயிரமும்  ஈடாகாத 'சிறியவும் பெரியவும் ஆகி,' மாசற்று ஒளி வீசும் கால் நகங்கள்,

'நிலனோடு  பொருந்திப் போந்து கானிடை வருந்தி' அன்று ' மூவடி கேட்ட வாமனனுக்கு
மூதண்டகூடம் முகடு முட்டச் சேவடி நீட்டிய' பெருமையை உடைய பாதங்கள்,

அக்ஷயம் என்னும் அம்புப் புட்டிலுக்கு ஒப்பாகும் கணைக் கால்கள்,

பறவைகளுக்கு  அரசனாகிய  கருடனின் உயர்ந்து விளங்கும் கழுத்தினை ஒக்கும் தொடைகள்,

மகிழ மலர் போன்ற உந்திச் சுழிகள்,

திருமகள் பிரியாது விளங்கும் மரகத மலையொத்த திருமார்பு,

கீழ்த்திசையைத் தாங்கி நிற்கும் ஐராவதம் எனும் யானையின் துதிக்கை போல முழந்தாளைப் பொருந்தி நிற்கும் கரங்கள்,

'பச்சிலைத் தாமரை' சூரியனைக் கண்டது போல் சிவந்த நகங்கள்,

சந்தனக் குழம்பும் அகிற் குழம்பும் தடவப் பெற்ற அகன்ற திருத்தோள்கள்,

இளமையான கமுக மரம் போன்ற மிடறு,

தாமரைமலரென விகசிக்கும் திருமுகம்,

மலர்க் கண்கள்,  

புன்முறுவலோடு, இன்மொழி பயிலும் திருவாய். அதிலே முத்துக்களோ, முழுநிலவைத் துண்டுக்களாக்கிக் கோர்த்த வரிசையோ, அமிழ்தத் துளிகளோ, சத்தியத்தின் அரும்புகளோ என முளைத்து விளங்கும் பல் வரிசை,

இந்திரகோபப் பூச்சியின் சிவப்பைப் பெற்று விளங்கும் அதரங்கள்,

உவமையே சொல்ல முடியாத வளைந்த அழகிய புருவங்கள்,

அஷ்டமிச் சந்திரனையொத்த நெற்றி,

நீண்டு, சுருண்டு, இருண்டு, நெடுநீலம் பூண்டு, நுனிசுருண்டு, தெய்வத்தன்மையோடு கூடிய நறுமணம் கமழும் கூந்தல்,

மத்த யானையையும், ஏற்றினையும்  ஒத்த கம்பீரமான நடையோடு கூடிய எம்பிரானை வர்ணிக்க வார்தைகளும், உவமைகளும் உண்டோ? என அநுமன் ஶ்ரீ ராமபிரானின் திருவழகை எடுத்துச் சொல்கிறான்.     

பிரிவுத் துயரிலே வாடும் சீதையின் மனம்  ஆறுதல் அடையும் பொருட்டு அடையாள உரைகளைக் கூறி கணையாழியைக் கொடுக்க,"வாங்கினள், சிரத்தில் தாங்கினள், மலர்க் கண்மிசை ஒத்தினள்." அநுமனோ சீதைக்கு அம்மையாய், அப்பனாய், தெய்வமாய்க் காட்சியளித்தான்.

வாழிய வள்ளலே என அழைத்து, பதினான்கு உலகங்களும் அழியக் கூடிய மகாப் பிரளய காலத்திலும் உனக்கு அழிவில்லை, சிரஞ்சிவீயாய், அழிவில்லா ஆயுள் உனக்குத் தந்தேன் என அருள் செய்தாள்.

அடுத்து இவ்வளவு சிறிய உருவத்தோடு  கடல் கடந்து வந்தது எவ்வாறு என வினவ, அநுமன் மீண்டும் தன் பேருருவைக் காட்டுகிறான். அநுமனின் விஸ்வரூபத்தை  தரிசனம் செய்வோமா?

''தொழுத  கையினன், விரிந்த தோளினன்,''ஆகாயத்தில் மேலும் உயர்ந்தால் அண்ட கோளத்தின் உச்சித்தளம் தலையில் முட்டி, அண்டம் இடியும் என்று எண்ணி வளைந்த மூர்த்தியான்.

ஓங்கி வளர்ந்த மரங்களில் காணப்படும் மின்மினிப்  பூச்சிகளென  நட்சத்திரக் கூட்டங்கள் சுற்றிக் காட்சியளிக்கும் பொன் மேனியான்,  

இரு  சூரிய மண்டலங்களைப்  போல் சுடர்விடும் பொற்குண்டலங்கள் அசையும் காதினான்.

எட்டுத் திக்குகளிலும், எல்லா உலகங்களிலும், எல்லா உயிர்களும் அநுமனைப் பார்த்தன. அநுமனும், தேவர்கள் அனைவரையும் பார்த்தான். 

பெருமை பொருந்திய தன் விஸ்வரூபத்தைக் காட்டிய பெரியோனான அநுமனின் இரு பாதங்களும் பூமியை அழுத்தினபடியால், இலங்கைத் தீவே ஆழ் கடலில் மூழ்கியது போலாயிற்று. வெண்மையான அலைகள் பூமியின் மேலே படர்ந்து பெருக, மீன்கள் புரண்டு ஓடின.

சீதாப்பிராட்டியின் வேண்டுகோளுக்கிணங்க அநுமன் மீண்டும் பழைய உருவம் கொள்கிறான். சூளாமணியைப் பெற்றுக் கொண்டு,  அசோக வனத்தை அழித்து, அரக்கர்களை வதைத்து, இராவணனை சந்திக்கிறான். 
''வாலியோடு வாலும் போயிற்று,'' என்று கம்பர் கொஞ்சம் நகைச்சுவை விருந்து படைக்கிறார்.  இலங்கையைத்   தீக்கிரையாக்கி,    இராமதூதுவன் என்ற பெருமையுடன், திரும்பும் அநுமன் தென் திசை நோக்கிய தலையையும், கைகளையும் உடையவனாய் ,''வையகந் தழீ இ நெடிது'' அதாவது பூமியைத் தழுவியது போலப் படிந்து வணங்கினான். குறிப்பினால் தான் சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லாமல் சொல்லி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தினான் அநுமன்.



18 Dec 2012

வேண்டுமா, வேண்டாமா?

   சென்னை கந்தகோட்டத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக்  கொண்டிருப்பவன் முருகன். அவனைப் புகழ்ந்து வள்ளல் பெருமான் பாடிய பாடல்களில் அழியாப் பெருவாழ்வு  பெற்ற பாடல் ''ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற'' என்ற பாடலாகும். இந்தப் பாடல் பிறந்ததற்குப் பின்னணியாக ஒருகதை சொல்லப்படுகிறது. 

ஒரு நாள் இராமலிங்கம் மதிய வகுப்புக்கு காலதாமதமாக வருகிறார். வகுப்பின் முதல் மாணவன் 'ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்' என்ற பாடத்தினைச் சொல்ல மற்ற மாணவர்கள் பின்தொடர்ந்து  சொல்கிறார்கள். வேண்டாம் என்பது அமங்கலச் சொல் ஆதலால் அதனைச் சொல்ல மறுக்கிறார்  இராமலிங்கம்.

'வேண்டாம்' என்ற அவ்வை வாக்கு அமங்கலமானால் 'வேண்டும்' என்று நீ பாடு பார்க்கலாம் என்ற சவால் வருகிறது.. உடனே 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற  உத்தமர்தம் உறவு வேண்டும்,' என்ற பாடல் பிறந்தது. இந்தப் பாடலில் என்ன சிறப்பு? 

திருவள்ளுவரின் திருக்குறளில் ''ஒருமை'' என ஆரம்பிக்கும் குறட்பாக்கள் 4. ''ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல்," "ஒருமைக் கண் தான் கற்ற கல்வி'',  " ஒருமைச் செயலாற்றும் பேதை,"  என்ற மூன்று பாக்களிலும் ஒருமை என்ற சொல் ''ஒரு பிறவியில்'' எனப் பொருள் தரும்.
''ஒருமை மகளிரே போல,'' என்ற பாவில்  ''ஒருமை'' கற்பினைக் குறிக்கும்.

வள்ளலார்  பாடல் என்ன சொல்கிறது? இறைவனுடைய திருப் பாதங்களை நினைக்கும் போது ''ஒருமையுடன்'' நினைக்கவேண்டுமாம். அப்படி நினைப்பவர்கள்தான்  உத்தமர்கள், ஞானிகள். அவர்களுடைய உறவு மட்டும் கண்டிப்பாக வேண்டும்.
ஓ, ஓ ஓ, அப்படியா? நாங்கள் மட்டும் என்ன அப்படிதானே செய்கிறோம்? பூமாலை போடுகிறோம், அர்ச்சனை செய்கிறோம், ஒருமணிநேரம்   பாட்டுப் படிக்கிறோம். நைவேத்யம் செய்கிறோம், எல்லோருக்கும் கொடுக்கிறோம். நினைக்கிறோமே! 
எப்படி?
ஒரு வீட்டில் இறைவனை வழி பாடு நடக்கிறது. ''கைகள் இரண்டும் கனகவேல் காக்க"என்ற கந்தசஷ்டி கவசம் பாடிக்கொண்டு இருக்கிறார் வீட்டுத் தலைவர். செல் பேசி ஒலிக்கிறது.
'யாருன்னு பாரம்மா'' என்கிறார். அடுத்த வரி முடியும் முன்னால் வாசல் மணி அடிக்கிறது. ''இதோ வந்துவிட்டேன்னு சொல்லு. ''  ஜெட் வேகத்தில் வழிபாடு முடிகிறது.

சில வீடுகளில் கேசட் அல்லது சி.டி.யில் பாட்டு ஒலித்துக் கொண்டு இருக்கும். வீட்டு அம்மா, சமையல் செய்துகொண்டே கூடப் பாடுவார். நடு நடுவே கட்டளைகள் பறக்கும்.
ஆயிரம் கவலைகள் மனிதனுக்கு. மனம் குவிய, இறைவனை வழிபட, யாருக்கு நேரம் இருக்கிறது!

இதெல்லாம் இந்தக் காலத்தில் தான் என்று நினைக்காதீர்கள். பட்டினத்தார் பாடலைக் கேளுங்கள்,''

''கையொன்று விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
 பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
 மொய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
 செய்கின்றபூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே''

சரிதான்! ஒருமை என்றால் என்ன என்றுதான் சொல்லுங்க.
போட்டி நடக்கிறது!
மரத்திலே இருக்கும் பொம்மைப் பட்சியை அம்பெய்து வீழ்த்த வேண்டும். குரு கேட்கிறார், 'துரியோதனா, மரத்தைப் பார், என்ன தெரிகிறது?''
கிளைகளும், இலைகளும்,காய்களும் தெரிகின்றன, என்றான் துரியோதனன்
அர்ஜுனன் சொன்னான், குருவே, எனக்கு பட்சி மட்டும்தான் தெரிகிறது.
அவனுடைய மனம், இலக்கை நோக்கி, உடல் அம்பெய்தத் தயாராக, எண்ணம் முழுவதும் குவிந்து கிடக்கிறது. அதுதான் ஒருமை.
உலகையே மறந்து  சிலவேலைகளைச் செய்கிறோம்.  பாட்டுக் கேட்கிறோம், திரைப்படம் பார்க்கிறோம்.  

இறைவனை மட்டும் இதயத்திலே நிரப்பிக்கொண்டு, உடலாலும், மனதாலும், வாக்காலும் குவிந்த மனதோடு வழிபாடு செய்வதுதான் யோகம். அவர்கள்தான் யோகிகள். அதைத்தான் வள்ளலார் 'ஒருமையுடன்' என்கிறார். "என் உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருள்"
என்றும், ''கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து,''என்றும் பல பாடல்களில் இந்த ஒருமை என்ற சொல்லுக்கு விளக்கமளிக்கிறார் வள்ளல். யார் வேண்டுமானாலும் கடவுளை வழிபடலாம். ஆனால் அனைவராலும் ஒருமையுடன் வழிபடமுடிவதில்லை! அவ்வாறு வழிபடுகிறவர்கள் உத்தமர்கள். உன்னால் முடியவில்லை என்றால் பரவாயில்லை. அவர்களுடன் உறவாவது வைத்துக் கொள். பூவோடு சேர்ந்த நார் போல் ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் உன்னாலும் உன் மனதைக் குவித்து வழிபட முடியும்.

உத்தமர்கள் எப்படி இருப்பர்? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச மாட்டார்கள்.பெருமை உடைய இறைவனின் புகழ் பேசுவர், பொய் பேசார், சாதி மதம் என்ற பேய் பிடியாதவர்களாக, அவற்றுக்கு அப்பாற்பட்டவராக, உயர்ந்த ஒழுக்கம் உடையவராக, காமம் அற்றவர்களாக, இறைவனை எப்போதும் மறவாதவர்களாக,  இருப்பார்கள். அவர்களோடு உறவு கொள்ளும் நல்ல புத்தியைக் கொடு. உன் கருணையாகிய பெருஞ் செல்வத்தைக் கொடு. நோயற்ற வாழ்வைக் கொடு.

''தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே, சண்முகத் தெய்வமணியே,''
 வேண்டும் எனக் கேட்பவர்க்கு வேண்டியதைத் தருவாய்.

வள்ளலார் போல் சென்னையைப் பெருமைப் படுத்தியவர் வேறு யாராவது இருக்கிறார்களா?

வள்ளல்பிரானின் மலரடிகளை ஒருமையுடன் நினைத்து வணங்குவோமாக.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.















17 Dec 2012

An article from the new Indian Express

''In their flowing white clothes and headgears, the 16 dancers moved in perfect circles, on their wheelchairs, to the Sufi Kalaam at the recent International Anjali Children’s Festival in Bhubaneswar. And the audience was left awestruck by the feat of these dancers of Ability Unlimited—India’s first dance-theatre troupe for the disabled. With their amazing control over the wheelchairs, their performance—Sufi on Wheels—was an instant hit. Not surprisingly, the troupe enjoys places of pride in both the Guinness Book of World Records and the Limca Book of Records, being the only group in the world to perform Sufi dance on the wheelchairs.''

http://newindianexpress.com/magazine/article1377670.ece

A must read article by everyone to know the unlimited power of people with disabilities. If you want you can do wonders says  Dancer- choreographer guru Syed Salauddin Pasha. Born into a Muslim family, Pasha was inclined towards Sanskrit shlokas and the philosophy behind the dance forms.

He says,'People with disabilities do not need anybody's mercy, but an opportunity.''

27 Nov 2012

திருவண்ணாமலை தீபத்திருநாளில் - ஓர் அனுபவம்



நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலம்! 2668' உயரமான மலை. 


தீபத்திருநாளில் அண்ணாமலையார் தரிசனம் நேரில் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை! அதற்கென்ன போகலாம் எனத் தீர்மானித்து தீபத்திருநாளுக்கு முதல் தினமே அங்கேபோய்ச் சேர்ந்தோம்.

தீபத்தன்று விடியற்காலை 4 மணிக்கு பரணி தீபம். தரிசனத்திற்கு 2 மணிக்கு எழுந்து குளித்து கோவிலுக்குப் போனோம். கோபுர வாசலிலே நீண்ட வரிசையில் நின்று, உள்ளே போய் சிறு மண்டபத்தின், மேல் தளத்தில் குழுமி இருந்த ஜனங்களுடன் சேர்ந்து கொண்டோம். நல்ல குளிர் காற்று, நட்சத்திர ஒளியை மங்கச் செய்யும் மின் விளக்குகள். நாம முழக்கங்களுடன் பரணீ தீப தரிசனமும் ஆயிற்று.

சும்மா இருப்பது என்னத்துக்கு, ஒரு முறை சுவாமி தரிசனம் செய்யலாம்னு போனோம்.
ஐயா, கொஞ்சம்...... ஒரு நிமிஷம்.... தள்ளாதீங்க, நாங்க  வெளியிலே போயிடரோம்!.....
எப்படிம்மா போவீங்க? அதெல்லாம் முடியாது முன்னாலே போங்க! 
நெருக்கித் தள்ளுகிறது கூட்டம்! அடிதடி சண்டை! ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு, பிடித்துத் தள்ளுகிறார்கள். வழியை மறைத்துக் கொண்டு, வெறி பிடித்தார் போல் ஏதோ கைலாசத்திற்கு நேரடியாகப் போவதற்கு வானவர்கள்  வாகனத்தில் ஏற அழைப்பது போல அலை மோதுகிறார்கள்.

இந்தக் கூட்ட சுழற்சியில் நம்மை உள்ளேயும் போகவிடாமல், வெளியேயும் வரவிடாமல், எந்தக் கணத்தில் கீழே விழுவோம், விழுந்தால் எழுவோமா, உயிரோடு இருப்போமோ என்றெல்லாம்  தலை கிறுகிறுக்கச் செய்து விட்டது பக்திவெறியர்கள் கூட்டம். இதுதான் வாய்ப்பென்று மேலே உராய்கிற   பெரிசும், சிறிசும்! அப்பாடா, பத்து நிமிடத் தலை சுற்றலுக்குப் பின் ஒரு வழியாய் வரிசையில் நாங்கள் நிறுத்தப்பட்டோம்! ஆம் நாங்களாக நிற்கவில்லை!

வரிசை நகர்ந்து ஒரு வழியாக அண்ணாமலையாரின் சந்நிதிப் பிரகாரம் சேர்ந்தவுடன் சடாரென்று மீண்டும் வரிசையிலிருந்து எல்லோரும் அடுத்த தர்மதரிசன வரிசைக்கு ஓடினார்கள்! திரும்பவும் வரிசைக்குப் போக விரும்பாமல், ஸ்பெஷல் டிக்கெட் வாங்கவேண்டுமா, வேண்டாமா, (வேண்டும் என்றால் வெளியில் போய் மற்றொரு வரிசையில் நிற்கும்படி ஆகும்) என்று திகைத்து, இவ்வளவு தூரம் வந்தும் தரிசனம் செய்ய முடியவில்லையே என்று வருந்தி நின்ற அந்த நேரத்தில் .......

சுமார் ஐம்பது வயது இருக்கும், நெற்றியில் குங்குமப் பொட்டு, தமிழ்நாட்டுக் கொசுவம் வைத்துக் கட்டிய புடவை, சாந்தமான முகம்! தனிவரிசையின் நுழை வாயிலில் நின்ற அந்த அம்மாள் எங்களைப் பார்த்து, உள்ளே போவணுங்களா? என்றார். ஆமாங்க, டிக்கட் இல்ல என்றவுடன், கையைக் காண்பித்து இருங்க என்று சொன்னார். ஒரு குழு உள்ளே புகுந்தபின் இடைப்பட்ட நேரம் அது. உள்ளே நுழைந்தால் நுழைவுச் சீட்டைக் காண்பிக்க வேண்டும்! அடுத்த குழுவினர் உள்ளே வர ஆரம்பித்தனர். ஒரு பத்துபேரின் நுழைவுக்குப் பின் அந்த அம்மா இரண்டு சீட்டுக்களைக் கையில் கொடுத்து எங்களை உள்ளே போகச்சொன்னார்.  நாங்களும் நுழைந்தோம். ஒரு பயம், எங்கே வெளியே போங்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று!  

அண்ணாமலையாரை கண் குளிர தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்தோம். அந்த அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போகலாம் என்று அம்மன் சந்நிதி மற்றும் பிற இடங்களிலும் தேடியும் அவர்கள் கண்ணில் படவில்லை. கதை விடுகிறேன் என்று நினைக்கிறீர்களா? சத்தியமாக உண்மையாக நடந்ததுதாங்க!

தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டு, உணவருந்தியபின் மாலை 4  மணிக்கு கோவில் வாசலுக்கு வந்து எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள், உள்ளே நடக்கும் எல்லாவற்றையும் கண்டு மகிழ்ந்து, தீபம் ஏற்றப்படுவதையும்  பார்க்கலாம் என்றார் நண்பர்.அவர் கோயில் கட்டளைக்காரர்.

மாலை 4 மணிக்குத் திருவண்ணாமலை கோவில் கிழக்கு வாசலில் நின்றோம். நண்பரைக் காணவில்லை! எங்கும் ஜன சமுத்திரம்!  'எள் போட்டால் எள் விழாத அளவுக்குக் கூட்டம்,' என்பார்களே, அந்தப் பழமொழியின் பொருள் அன்றைக்குதான் எனக்குப் புரிந்தது. மெதுவாக மேற்கு வாசல் வந்தோம்! பக்தர்கள் கோவிலைச் சுற்றி அலை அலையாக, நான்கு வீதிகளிலும் வந்த வண்ணம்! வீதிவலம் வருகிறார்கள்! மரியாதையாக ஒதுங்கி மீண்டும் தங்கும் விடுதியை அடைந்து ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்தோம். கோவிலிலிருந்து தீபத்தை மலைமேல் எடுத்துச் செல்வதையும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் நெய் தீபம் ஏற்றப்படுவதையும், ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் அக்னிப் பிழம்பையும் கண்டு ஆனந்தித்தோம். 

வீட்டிலே அமர்ந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் நாம் காண்பதும், நேரிலே காண்பதும் வெவ்வேறு அநுபவங்கள். ஆண்டவனை மறந்துவிட்டு கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துத் திண்டாடுவதைவிட  வீட்டிலே ஏற்றிய விளக்கிலே, விளக்கின் ஒளியிலே, ஒளியின் பிரகாசத்திலே ஆண்டவனை, அமைதியைக் காணும் ஆனந்தம்! 'அன்பாகிய அகல் விளக்கில், ஆர்வமாகிய நெய் நிறைத்து, எண்ணங்களாகிய திரியை நனைய வைத்து,  ஆத்ம அநுபூதியாகிய சுடர் விளக்கை ஏற்றினேன் ' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. 

'நான் யார்' என்ற ஆத்மவிசாரத்தின் மூலம் இந்தப் பிரபஞ்ச சக்தியின் உண்மையை அறியலாம் என்று உணர்த்திய மகரிஷி ஶ்ரீ ரமணரின் 'அருணாசல அட்சர மண மாலை'யைப் பாடி இந்த கார்த்திகை தீபத்திருநாளில் அண்ணாமலையின் தீப ஒளி எங்கும்  பிரகாசிக்க   வேண்டுகிறேன்.
  
      அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ! அருணாசல சிவ!

                       





21 Nov 2012

மாகாளிக்கிழங்கு வைபவம்

சமீபத்தில மாகாளிக்கிழங்கு ஊறுகாய் எப்படிப் போடுவது என்று சமையல்கலை  வலைத் தளத்தில்  பார்த்தேன்.  சேலம் மாவட்டத்தில்  நவம்பர், டிசம்பர் மாத விடியற்காலைப் பொழுதுகளில்  'மாவாணிகெழங்கு' என்ற குரல் கேட்கும். இந்த மாதங்களில் தான் முற்றாத கிழங்குகள் கிடைக்கும் என்பதால்  இதனை அகழ்ந்தெடுத்து மூட்டைகளில் விற்பனைக்குக் கொண்டுவருவார்கள். கூடவே எலுமிச்சம் பழ மூட்டையும் இருக்கும்.

குரல் கேட்டவுடன் என் தந்தையார் கதவைத் திறந்துவிடுவார். பின் என்ன! குறைந்தது  அஞ்சு கிலோ+ கொசுரு, அந்தக்காலத்து அறுக்கஞ்சட்டியில் உட்காரும். தண்ணீர் ஊற்றப்பட்டு வீடே கமகமக்கும். என் அம்மாவின் தலை கிறுகிறுக்கும்! இன்னொறு முறத்தில் எலுமிச்சம் பழங்கள் பொன் போலத் தகதகக்கும். ஒன்றுமே பேசாமல் அம்மா வேலை பார்ப்பாள்............!

ஒரு சிலருக்கு இந்தக் கிழங்கு வாசனை பிடிக்காது. மூட்டைப் பூச்சி வாசனை அடிக்கிறது, பக்கத்திலேயே கொண்டுவராதே என்று ஓட்டம் பிடிப்பார்கள்!   நல்ல கெட்டியாக, தடித்த  தோலுடன் இருக்கும் இதன் தோலை முதலில் சுரண்டி, அடுத்த தண்ணீர்ப் பாத்திரத்தில் போடுவோம். ஒவ்வொறு கிழங்கையும் எடுக்கும்போதெல்லாம் அறுக்கஞ்சட்டியை இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்! பார்த்தால் குறையுமா? அப்படியே மெதுவாக ஒரு மதியப் பொழுதுவரை தோல் சீவும் வைபவம் நடக்கும்.

அடுத்ததாக இதைப் பொடிப்பொடியாக அப்பா நறுக்குவார். நடுவிலே கெட்டியாக காம்பு இருக்கும். அதை எடுக்கவேண்டும். நறுக்கி முடிக்க சாயங்காலம் வரை ஆகிவிடும்.  இந்தக் கிழங்கில் காற்று பட்டால் கருத்து விடும் என்பதால் நறுக்கியதையும் தண்ணீரில்தான் போடுவோம். பெரிய ஜாடியை சுத்தம் செய்து வைத்திருப்பாள் அம்மா! அதில் நறுக்கிய கிழங்குகளை தண்ணீர் இல்லாமல் வடித்துப் போடவேண்டும். இந்தக் கிழங்கு உப்புப் போட்டாலும் தண்ணீர் விட்டுக் கொள்ளாது.

பின்னர் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் குலுக்கி, அது முங்கும்வரை எலுமிச்சம் பழச்சாற்றை அபிஷேகம் செய்ய வேண்டும். அப்பாடா என்று, போடுபவர்கள்  கையை உடைக்கும் கிழங்கு இது. நன்றாக ஊறியபின் ஒரு கரண்டி அளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் இட்டு, அதில் தயிர் சேர்த்து தொட்டுக் கொள்ளலாம்.

இந்தக் கிழங்கு சூட்டை ஏற்படுத்தும் அதனால்தான் எலுமிச்சம் பழம் பிழிகிறோம். 
ஏற்கெனவே சூட்டைக் கிளப்புவது எனவே, கடுகு தேவையில்லை. என் தந்தையாருக்கு மிகவும் பிடித்த ஊறுகாய் இது. எத்தனை நாள் ஆனாலும் கெட்டுப் போகாது. நாளாக நாளாக சுவை கூடுமே தவிர குறையாது.

மாகாளிக் கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்

1. மாகாளிக் கிழங்கு  2. மஞ்சள் தூள் 3.மிளகாய்த் தூள் 4.உப்பு 5. எலுமிச்சம் பழம்
மாகாளிக்கிழங்கை சுத்தம் செய்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். எலுமிச்சை சாற்றைப் பிழியவும்.

தாழ்வாரத்தில் 'அறுக்கஞ்சட்டி'யைச் சுற்றி உட்கார்ந்து எப்படி ஓடிப்போவது என்று தெரியாமல் கிழங்கு சீவிய நினைவுகள் ஓடாமல் இன்னும் சுற்றிவரும் வேடிக்கையை என்னென்பது!











17 Nov 2012

தேடிய படலம்

1968 ஆம் ஆண்டு. ஒரு விடியற்காலைப் பொழுதில் கண்ணன் கல்லூரிக்குத் தயாரானான். பரிட்சைத் தேர்வுத்தாளில் அண்ணனிடம் கையெழுத்து  வாங்கவேண்டும். மிகக் குறைவான மதிப்பெண் வாங்கி இருந்ததால் முதல் நாளே அண்ணனிடம் காட்ட பயம். புறப்படும் போது என்றால், அதிக நேரம் திட்டு வாங்கவேண்டாம் எனத் தீர்மானித்திருந்தான். மெதுவாக தேர்வுத்தாளை அண்ணனிடம் நீட்டினான்.

மதிப்பெண்களைப்  பார்த்த சிவராமனுக்கு வந்தது கோபம். சமீபத்தில்தான் வீடு மாற்றி இருந்தார்.ஏகச் செலவு. வங்கி வேலை என்றாலும் மூன்று பேர் சாப்பிட வேண்டும். போதாக் குறைக்கு கல்யாணம்  செய்து கொண்டாயிற்று. அவசரமாக ஒரு  குழந்தை வேறு.  ஒரு மாதத்தில் மனைவியும் வந்துவிடுவாள். எத்தனையோ கஷ்டங்களுக்கு இடையே தம்பியை படிக்க வைக்கிறார். இந்தப் பையன் நூற்றுக்கு இருபது மார்க் வாங்கினால்!

வாய்க்கு வந்தபடி திட்டினது போதாதென்று ஒரு அடியும் வைத்தார்.......அம்மா ஓடிவந்து சமாதானம் செய்தாள். டிபன் டப்பா, கையில் புத்தகங்கள் - மிகுந்த வருத்தத்துடன், அழுகை  முட்டிவரக் கிளம்பினான்    கண்ணன். சிவராமனும் ஆபீஸ் போனார்.

மாலை ஆறுமணிக்கு மேல் தன் குடும்ப நண்பருடன் வீடு வந்தவர் வாசலிலே அழுத கண்ணும், சிந்திய மூக்குமாய் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து என்ன ஆயிற்று என்றார் பதற்றமாக.
ஒன் தம்பி காலையிலே போனவன் வழக்கமா நாலுக்கெல்லாம் வீட்டில இருப்பானே இன்னும் காணலையே?
எல்லாம் வருவான் என்றவர்,  நண்பரைப் பார்த்து ,'சார் ராஜூ வந்துட்டானா பாருங்க,ரெண்டு பேரும் சேந்துதானே வருவாங்க' என்றார்.

என்ன இருந்தாலும் நீ அவனை அடிச்சிருக்கக் கூடாது. நல்லதனமா சொன்னா படிக்கமாட்டானா, என்று சொல்லிக்கொண்டே காப்பியைக் கொடுத்தார் அம்மா!
வாசலிலே நண்பரும் மகனும்! கண்ணன் இன்னிக்கு காலேஜுக்கே வரலியே மாமா என்றான் ராஜு.

அம்மா அழத்தொடங்க, சிவராமன் பதறிப் போனார். அது வரையிலும் காலை நிகழ்ச்சிகள் ஞாபகத்தில் இல்லை. அடடா! இப்போது என்ன செய்வது என்று திகைத்த அவரை நண்பர் சமாதானப்படுத்தினார்.
ராஜுவை    கண்ணன்  அம்மாவுக்குத்  துணைவைத்துவிட்டு  இருவரும் கிளம்பினார்கள்.

தேடும் படலம் ஆரம்பமானது. அந்தக் காலத்தில் 'செல்' இல்லையே! கல்லூரி, நண்பர்கள், உறவினர் வீடுகள் எங்கும் அவன் இல்லை.  ஏன் சார் என்ன ஆயிற்று, திட்டினீங்களா? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல், அழுகையை அடக்கமுடியாமல், பெரிய தப்பு செய்து குற்றவாளிக்கூண்டில் நிற்கின்றவன் போலக் கூசிக் குறுகிப் போனார் சிவராமன். கூடப் பிறந்தவன், கண்டிக்க உரிமையில்லையா? ஏதோ அவனை ஒரு குழந்தையைப் போல் நினைத்து விட்டார். அவ்வளவுதான்.

போலீஸ் புகார் கொடுக்க மனம் வரவில்லை. நண்பருடன் கீழ்ப்பாக்கம், பொது மருத்துவ மனைகளில் உள்ள விபத்துப் பிரிவுகளில், மரணமடைந்தவர்களை பாதுகாத்து வைக்கும்  'மார்ச்சுவரியில்,' சடலங்களின் முகப் போர்வையை நீக்கிப் பார்த்த ஒவ்வொரு கணமும் நெஞ்சு வெடித்தது.   எல்லா இடங்களிலும் தேடியதுதான் மிச்சம். எப்படியோ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று உறுதி ஆனதில் ஒரு நிம்மதி!

கடைசியாகத் தன்  உறவினர்களுக்கு 'அங்கு வந்தால் தெரியப்படுத்தவும்' எனத் தந்தி அடித்துவிட்டு வேறு வழியின்றி  இருவரும்  வீட்டிற்குத்   திரும்பினார்கள்.

கலைந்த தலை தளர்ந்த நடை, கண்ணீர் வழியும் கண்கள்! தன் சொந்த சவுகரியங்களைத் தியாகம் செய்துவிட்டுப்  பல  கஷ்டங்களுக்கு  இடையே  படிக்க  வைத்ததற்கு  கிடைத்த  பலன் இதுதானா என்று உள்ளம் அழுதது.
அவருடைய தாயின் கோபமும் அவர்மேல் பாய அழுதவண்ணம் உறங்கிப் போனார் சிவராமன்.

வீட்டைவிட்டு  வெளியே வந்த  கண்ணனுக்கு அழுகையாக வந்தது. பத்தாம்வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு ஆங்கில மீடியத்தில் பி.யூ.சி படிக்க கஷ்டமாக இருந்தது அவனுக்கு. படிப்பில் உதவி செய்ய யாருமில்லை. அது மட்டுமல்லாது கல்லூரி திறந்து இரண்டு மாதம் தான் ஆகியிருந்தது.
அதுவும் தினமும் திருவல்லிக்கேணியில் இருந்து அண்ணாநகர் போகவேண்டும்! சும்மா வகுப்பு டெஸ்ட், அதுக்குப் போய் அண்ணா அடிக்கிறாரே!  அவன் நேராக ரயில்வே ஸ்டேஷன் போய், புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் ஏறி விட்டான். சிதம்பரம் ரயில் நிலையம் நெருங்கிய போது டிக்கெட் பரிசோதகர் உள்ளே நுழைந்தார். கண்ணனிடம்  டிக்கட் இல்லை. அதற்குள் ரயில் நிலையம் வர கீழே இறங்கியவன் கோவிலுக்குப் போனான்

கோவில் குளத்தைப் பார்த்தவுடன் பேசாமல் அதில் குதித்துவிடலாமா என்று தோன்ற, சமயம் பார்த்து ஒரு குடும்பம் அங்கே உட்கார்ந்து சாப்பாட்டு மூட்டையை அவிழ்த்தது. கண்ணனுக்கும் பசித்தது. டிபன் டப்பாவைத் திறந்து அம்மா வைத்திருந்த தேங்காய் சாதத்தை ருசித்து சாப்பிட்டான். கொஞ்சம் தெளிவு வந்தது. தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், கையில் காசு இல்லை. கோபத்தில் பேருந்துக்கு எடுத்து வரும் பணத்தையும் வாங்கிக் கொள்ளவில்லை.  என்ன செய்வது? திரும்ப ரயில் நிலையம் போய் காரைக்குடி வண்டியிலே ஏறினான்.

விடியற்காலையில் வாசலில் வந்து நின்ற தம்பியைப் பார்த்து அண்ணா, வா வா என்றார். சூடான காப்பி வருவதற்குள்  ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று தபால் தந்தி அலுவலகம் சென்று தம்பிக்கு செய்தி அனுப்பினார்

சிவராமனுக்கு போன உயிர் திரும்பியது. எப்படியோ போகட்டும். இனி ஒருநாளும் தம்பியைத் திட்டவோ அடிக்கவோ செய்ய மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டார். அவருடைய மாமனார் எழுதிய கடிதத்தை மீண்டும் படித்தார்.

 ''பாரப்பா, ஒரு ஆண் மகனால் குடும்பத்தில் இருக்கும் எல்லோரையும் திருப்தி செய்ய முடியாது. உன்  தம்பியைத் திட்டினால் உன் அம்மா பரிந்து கொண்டு வருவாள். சொந்தப் பிள்ளையைத் திட்டினால் மனைவி ஆகா  என்று ஓடிவருவாள். தம்பியோ, பிள்ளைகளோ, இவர்கள் தாங்குவதால் நாம் சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள். எல்லோரும் ஒரே கட்சி! இவர்கள் ஓடிப் போவதும், நாம் தேடித்திரிவதும், வீட்டில் சண்டைதான் மிச்சம். என்னுடைய இரு தம்பிகளும் இதே போல் ஓடிப் போய் கஷ்டப்படுத்தி இருக்கிறார்கள். எனவே ரொம்ப அலட்டிக்கொள்ள வேண்டாம். உன் தம்பியை ரொம்பத் திட்டாதே.''

பதினைந்து, பதினாறு வயதில் குழந்தைப் பருவத்திலிருந்து, வாலிபப் பருவத்திற்கு உடலும் உள்ளமும் மாற்றமடையும்  காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நண்பனைப் போல் நடத்த வேண்டும். நிறையப் பேச வேண்டும். புத்தகங்கள் படிப்பதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பரிட்சைகளில் மதிப்பெண் குறைந்தாலும்  அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தட்டிக் கொடுத்து அவர்களாகவே பொறுப்புணர்ந்து நடந்து கொள்ளுமாறு செய்ய வேண்டும்  ஆகிய படிப்பினைகளை இந்தச் சம்பவம் கற்றுக் கொடுத்தது என்பது மிகையில்லை

அநுமன் சீதா தேவியைத் தேடி இலங்காநகர் முழுவதும் அலைந்தார் என்பதைக் கம்பராமாயண உரைநடையில் படித்தபோது சென்னை மாநகரில் அண்ணன் கோபித்தார் என்று  வீட்டுக்கு நேரத்தோடு திரும்பாத தம்பியைத் தேடிய படலம் ............ 'மார்ச்சுவரியின்' சடலங்களில் உறவுகளைத் தேடும்  கொடுமை  யாருக்கும் வரக்கூடாது

மனித உறவுகள் கண்ணாடிப் பாத்திரம் போன்றது. எப்போதும் கவனம் தேவை.

கோபம் மனிதனின் முதல் எதிரி.

குழந்தைகளின் மனவியலை அறிந்து கொள்வது முக்கியம்.

குழந்தைகளுக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அவர்களுடைய மனம் புண்படாதவாறு

நடந்து கொள்ளுதல் வேண்டும்.


அறிவுரை சொல்லாதீர்கள், நடந்து காட்டுங்கள்.

9 Nov 2012

சாபம்


பாருக்குள்ளே நல்ல நாடென்று
மீசை முறுக்கி நெஞ்சை நிமிர்த்தி
பாரதி பாடிய பாரத நாட்டை,
பஞ்சவர் தேவியின்  மானத்தைக் 
காத்த மாயவனை ராதை நாயகனை
தேடித் தருவீரா? தேடித்தருவீரா?

பச்சைக் குழந்தையை, பருவப் பெண்களை
நல்லவர் இவரென நம்பி வரும் பிற 
நாட்டுப் பெண்டிரை,
நாலுபேர் சேர்ந்து, நாணின்றித் 
தொட்டு, அடித்துச் சாய்த்தே,
மானத்தை அழிக்கிறார்- பாருக்குள்ளே...

பத்து பேர் இதனைப் பார்த்து மகிழ,
அடடா, எனச் சிலர் படம் பிடித்து
மார் தட்டிப் பிறர் காண நெஞ்சை
நிமிர்த்தி, நாய்களெனச் சுற்றி
நகைத்து நிற்பார்!-- பாருக்குள்ளே...

காட்டு மிராண்டியர், பேடியர்
எங்கள் பாரதத் தாயின் 
வயிற்றினில் பிறந்தவரோ?
பெற்றதாயினைக் கற்பழிப்பாரோ?
சொந்த சகோதரி எனின் பார்த்து
நிற்பாரோ? இவர் மானுடரோ?
இல்லைப் பேய் மக்களோ? -அட
ஒவ்வொரு பெண்ணும் தாயன்றோ?- பாருக்குள்ளே...

தாய்க்குல வயிற்றினில் வைத்திட்ட தீ
மானுடக் கூட்டத்தை அழிக்குமன்றோ?
அழுது தீர்ப்போமோ? ஆங்காரம் 
கொண்டு காளி அவதாரம் எடுப்போமோ?
நெருப்பினில் வீழ்வோமோ? அட
நஞ்சைக் குடிப்போமோ?
வயிற்றினில் வளரும் கருவைக் 
கலைப்போமோ? கயமையின் 
சின்னத்தைக் கட்டியணைத்தே
ஒரு முத்தம் கொடுப்போமோ? 
முலைப் பாலில் ஓர் துளி 
நஞ்சைக் கலப்போமோ? - பாருக்குள்ளே...

மெல்லப் பெண்ணினம் இனிச் 
சாகும், பிள்ளையைப் பெறும்
பாவம் போகும்!
பிள்ளையைப் பெறும் சாபம்
இங்.... கினிப்.....  போகும்.  சாபம் போகும்.......!
                                                    

2 Nov 2012

திருப்புகழ் -முத்தைத் தரு

முகுந்தன், ருத்ரன், கமலன் என்ற மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டவன் மு, ரு, க,  எனும் அழகன்.  அன்றாட வாழ்வின் அல்லல்களில் சிக்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு அருமருந்தானவன்.

நினைக்க  முக்தி தரும் திருஅண்ணாமலையில் அருணகிரிப் பெருந்தகையார் முன் காட்சி அளித்து,
''முத்தைத் தரு'' என்று அடியெடுத்துக் கொடுத்துப், பாடப் பணித்து மறைந்தார் முருகப் பெருமான்.

திசைகள் நான்கிலும் உள்ள அன்பர்கள் அற்புதம் அற்புதம் என்று ஆனந்திக்கும்,  சித்திர கவித்துவ சத்த மிகுத்து அருளாலும், பொருளாலும், சந்தத்தாலும், ஓசையாலும் உயர்ந்தது திருப்புகழ்.

எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருவருளினால் இந்தத் திருப்புகழின் பொருள் விளக்கம் வேண்டுமென ஒருவர் கேட்க அதை எழுதப் புகுந்தேன். முதலில் பாடல்.

                                                          நூல்

ராகம்: ஷண்முகப்ரியா                                                            தாளம்: த்ரிபுடை


                          முத்தைத்தரு பத்தித் திருநகை
                                 அத்திக்கிறை சத்திச் சரவண
                                 முத்திக்கொரு வித்துக் குருபர                        எனவோதும்-

                          முக்கட்பர மற்குச் சுருதியின்
                                  முற்பட்டது கற்பித் திருவரு
                                  முப்பத்துமு வர்க்கத் தமரரு                             மடிபேணப்;

                          பத்துத்தலை தத்தக் கணைதொடு
                                  ஒற்றைக் கிரிமத்தைப் பொருதொரு
                                   பட்டப்பகல் வட்டத் திகிரியி                          லிரவாகப் -

                          பத்தற்கிர தத்தைக் கடவிய
                                 பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
                                 பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது                         மொருநாளே;

                          தித்தித்தெய வொத்தப் பரிபுர
                                   நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
                                   திக்கொட்கந டிக்கக் கழுகொடு                  கழுதாடக்-

                          திக்குப்பரி யட்டப் பயிரவர்
                                  தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
                                  சித்ரப்பவுரிக்குத்  த்ரிகடக                             எனவோதக்;

                          கொத்துப்பறை  கொட்டக் களமிசை
                                   குக்குக்குகு குக்குக் குகுகுகு
                                   குத்திப்புதை புக்குப் பிடியென                      முதுகூகை

                          கொட்புற்றெழ நட்பற் றவுணரை
                                    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
                                    குத்துப்பட வொத்துப் பொரவல                   பெருமாளே.


முத்தைத் தரு பத்தித் திருநகை-
பத்தியென்றால் வரிசை. முத்துப் போன்ற பல்வரிசை தெரியுமாறு புன்னகை பூக்கிறான் முருகன். அது முருகப் பெருமானுடைய முகத்தில் -'திருநகை'-முத்தால் ஆன ஆபரணம் போல-ஒளி வீசுகிறது. அது பக்தர்களுக்கு 'திரு'வைக் கொடுக்கிறது. திரு என்றால் செல்வம். என்ன செல்வத்தைக்  கொடுக்கிறது? பக்தியைக் கொடுத்து, மோட்ச சாம்ராஜ்யமாகிய அழியாத செல்வத்தைக் கொடுக்கிறது.

அத்திக்கிறை-
அத்தி-தெய்வானை. தெய்வானை முத்தின் தலைவனை

சத்திச் சரவண
மலைமுத்தான உமையம்மையின் புதல்வன், சரவணப் பொய்கையில் தோன்றியவன். எனவே 'சத்திச் சரவணன்.'அன்னையிடம் இருந்து சக்தி மிக்க வேலாயுதத்தைப் பெற்றவன்.

முத்திக்கொரு வித்து
முக்தி அடைய விரும்புபவர்கள் முருகவேளுடைய திருவடிகளிலே கருத்தைச் செலுத்தி பக்தி எனும் விதையை இதயத்தில்  நடவேண்டும்.

குருபரன்
கு - அந்தகாரம் அல்லது இருள்
ரு -   நீக்குபவர். ஆணவ இருளை நீக்குபவர்
பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருவடிவாய் வந்து அருள் புரிபவர் குருபரன்.

எனவோதும்
என்று போற்றிய

முக்கட் பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து
மூன்று கண்களையுடைய சிவபெருமானுக்கு, நான்கு வேதங்களிலும் முதன்மையான 'ஓம்'என்ற பிரணவ மந்திரப் பொருளை உபதேசித்து

இருவரும் முப்பத்து முவர்க்கத்து அமரரும் அடிபேண
பிரமனும், திருமாலும், முப்பத்து முக்கோடி தேவர்களும் திருவடிகளிலே வணங்கப் பெரும் பெருமை உடையவன்,

பத்துத்தலை தத்தக் கணைதொடு
இராமாவதாரத்தில் இலங்காபுரி அரசனான இராவணனின் பத்துத் தலைகளும் வீழுமாறு அம்பு தொடுத்த வீரனும்

ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது மந்தரமலையை மத்தாக்க, அதைத் தாங்கும் பொருட்டு கூர்மாவதாரம் எடுத்தவனும்

பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப் 
மகாபாரதப் போரில், கண்ணனாய், பட்டப்பகலில் சூரியன் மறைந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி  ஜெயத்ரதன்  மாளும்படிச் செய்தவனும்

பத்தற்கு இரதத்தைக் கடவிய
தன் நண்பனும், பக்தனுமான அர்ச்சுனனுக்குத்  தேரோட்டியாய் இருந்து அருள் புரிந்தவனும் ஆகிய

பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்
நீலமேக வண்ணனான திருமாலும்லும்  பாராட்டப் பெற்ற பெருமை உடைய முருகப்  பெருமானே.

பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது  ஒரு நாளே
பரிவோடு  என்னைக்  காத்து  அருள் புரிதல் வேண்டும்.

தித்தித்தெய வொத்தப் பரிபுர           

கால்களில் அணிந்த சிலம்புகள் தித்தித்தோம் என ஒத்து ஒலிக்கவும்

நிர்த்தப்பதம்  வைத்துப் பயிரவி
காளியானவள் நடனமிட

திக்கொட்க நடிக்கக் கழுகொடு-  கழுதாட
திசைதொறும்  ஒலிக்குமாறு ஆட, உடன் கழுகுகளும் பேய்களும் ஆடுகின்றன.

திக்குப்பரி யட்டப் பயிரவர்
எட்டுத் திக்குகளையும் காக்கும் அஷ்ட பயிரவர்களும்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
தொ..க்..குத்.... தொ....கு... என

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக - எனவோதக்
அழகிய வாத்ய ஒலிக்கு ஏற்றவாறு கூத்தாட

கொத்துப்பறை கொட்டக் களமிசை
பல பறைகள் முழங்க, போர்க்களத்தில்

குக்குக்குகு குக்குக் குகு
குத்திப்புதை புக்குப் பிடியென  - முதுகூகை
குத்து, வெட்டு, பிடியென கிழக்கோட்டான்கள்  சுழன்று ஆட,

கொட்புற்றெழ நட்பற்ற அவுணரை
சுழன்றாடும்  எதிரிகளாகிய அசுரர்களை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
கொன்று குவித்து கிரவுஞ்சமலையை வேலால் துளைத்து

குத்துப்பட ஒத்துப் பொரவல - பெருமாளே.
பொடிப்பொடியாக்கி  வெற்றிவாகை சூடிய முருகப்பெருமானே.
என்னையும் கருணையுடன் காத்து அருள் புரிவீராக.

குறிப்பு;
குலகிரியான  பொன்னிறமான கிரவுஞ்சமலை மாயைக்கு எடுத்துக்காட்டு. தாரகாசுரன் அரசு புரிந்த மாயமாபுரியில் கிரவுஞ்சன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். இவன் முனிவர்கள் செல்லும் வழியில் மாயையின் ஆற்றலினால் மலைவடிவாக நின்று, மலைக்குள் வழியிருப்பது போலக் காட்டி, உள்ளே நுழையும்  முனிவர்களை மயக்கிக் கொன்று தின்பான்.

அகத்திய முனிவர் மேருமலையிலிருந்து  தென்திசையில் உள்ள பொதியமலைக்கு வந்தார். அவர் வரும் வழியில் பெருமலை உருவாக நின்று அதற்குள் வழியிருப்பது போல் காட்ட, அவரும் உள் நுழைந்து வெகு தூரம் போய் வழிகாணாமல், அறிவுக் கண்ணால் அசுர மாயையை அறிந்து, வெளி வந்து ''அறுமுகப் பெருமான் அயில் வேலால் அழியக் கடவாய்" எனச் சபித்தார். சூரனுடன் போர் புரிந்த போது  கிரவுஞ்சன் மலைவடிவாய் நின்று வீரவாகுத் தேவர் முதலியோரை மலைக்குள் புகுமாறு செய்து மயக்கினான். கந்தவேள் கிரவுஞ்சத்தைப் அழித்தார்.

மந்தர மலை பீகார் மாகாணத்தில் உள்ள பாகல்பூருக்குத் தெற்கே 50 கி.மீ. தொலைவிலுள்ள மலை எனக் கருதப்படுகிறது. Ref.A concise Encyclopedia of Hinduism, Vol 2.

எட்டு குலகிரிகள்-கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.


                     
                           
                           
                   .
                                                      -----------------
















28 Oct 2012

ஹிந்திஜி-ஆமாங்க!

                வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்த எங்கள் உறவுகள் சிலர் விடுமுறைக்கு வருவார்கள். பேசிக் கொண்டே இருக்கும் போது திடீரென்று ஹிந்தியில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குள்ளே சுவாரஸ்யமாக பேச்சு நடக்கும். ஹிந்தி பாஷை தெரியாததால் நாங்கள் முழித்துக் கொண்டிருப்போம். பேசுபவர்களுக்குத் தெரியும் நமக்குப் புரியாத மொழியில் அவர்கள் பேசுகிறார்கள் என்று. வேண்டுமென்றே எரிச்சல் மூட்டுவதற்காகப் பேசுவார்கள்.

அவர்களுக்கு சரியான தமிழோ, ஆங்கிலமோ பேசவராது. என்றாலும் நமக்குத் தெரியாத பாஷை அவர்களுக்குத் தெரியும் அல்லவா? என் மாமியார் எப்போதும் ஹிந்தி சினிமா, ஒளியும் ஒலியும் பார்ப்பார். புரியாத மொழியின் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று எனக்குப் புரிய சிறிது காலம் ஆயிற்று! அடிக்கடி மகன் வீட்டிற்குப் போகும் போது இந்த பாஷைப் பிரச்சினையை சமாளிக்க, அடிப்படையான தேவையான வார்த்தைகளை உபயோகிக்க அவர் யாருடைய உதவியும் இல்லாமல் கற்றுக் கொண்டவிதம்  பாராட்டுக்குரியது.

வட இந்தியாவில் காசி, கயா, பத்ரிநாத் பயணத்தின் போது ரயிலில் பயணம் செய்தோம். சக பயணிகளிடம் ஆங்கிலத்தில் ஏதோ கேட்க, 'ஹிந்துஸ்தான் மே அங்ரேஸி போல்தே ஹை?' என்று சொல்லி பதில் கூற மறுத்துவிட்டார்கள்.

 எல்லாவற்றுக்கும் அச்சா,போடவேண்டும். ஒரு ஹை, ஹு வேண்டும், 'தமிழ் ஹை, ஹிந்தி தோடா, தமிழ் தோடா,' கொஞ்சம் மாலும்ஜி,  ஆனா பஜ்ஜி மட்டும் இல்லஜி, சப்ஜி இருக்குஜி, என்று வேடிக்கை செய்வோம்.
ஹிந்தி தெரிந்தால் ஹை ஹீல் காலணி போட்டுக் கொண்டது போல்!

''ஜாடு , போச்சா, கரோ,'' என்று உதவியாளரிடம் சொல்ல, பாட்டியம்மா, என்ன போச்சு  என்று கேட்க, வீடு பெருக்கித் துடைக்கச் சொல்கிறார் என்று புரிந்தது.

பாமா விஜயம் படத்தில் செளகார் ஜானகி ஹிந்தி பேசுவார்களே, அதைப் பார்த்து தமிழ் ரசிகர்களுக்கு ஒரே குஷி.

தமிழ் நாடு ஹிந்தி எதிர்ப்பு மாநிலம்! என்னுடைய கல்லூரி நாட்களில்தான் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. கொடி பிடித்திருக்கிறோம்! எனவே இயற்கையாகவே ஹிந்தி கற்றுக் கொள்ளப் பிடிக்கவில்லை

என்னதான் ஆங்கிலம் படித்தாலும் பேசும் போது சந்தேகம் வந்துவிடும். வீட்டில் இருப்பவர்களே கேலி செய்வது புதிது அல்ல. ஹிந்து பேப்பரைப் படித்தால் ஆங்கில அறிவு வளரும் என்பார் அப்பா

இப்போது பாருங்கள் கணினியைப் பயன் படுத்த, செல்போனின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள  இளைய தலைமுறையைப் போல் பெரியவர்களுக்குத் தெரிவதில்லை.

அட, கொஞ்சம் உதவி என்றால், 'உனக்கு என்னதான் தெரியும்' என்று இந்தக்காலப் பசங்க கேலி பேசுவது, சும்மா ஒரு இதுக்காக. அவங்களுக்கென்ன ஏதாவது தப்பாப் போனா 'டேக் இட் ஈஸி டாட், இட் ஈஸ் எ லேர்ணிங் ப்ரோசஸ்' என்பார்கள். ஆகா, என் பையன் எப்படி எல்லாம் கத்துக்கிட்டான், ஹீ ஈஸ் எ  ஜீனியஸ்' என்பார் தந்தை.

அதுவே மனைவியென்றால்,'நீ எதுக்கு இதையெல்லாம் செய்யறே? உனக்கு ஒன்னும் தெரியாது. பையனைக் கேட்க வேண்டியதுதானே' என்பார்.

ஐயோ, இங்கிலீஷ், விங்லீஷ் படம் பார்த்ததால் வந்த வினை! ஶ்ரீதேவி மென்மையான மனம் புண்பட்ட இல்லத்தரசியாக தன் உணர்ச்சிகளை இயல்பாகக் காண்பித்து இருக்கிறார். அதே சமயம் கற்றுக் கொள்ளும் ஆர்வம், அதற்கான விடா முயற்சி, இவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

 நிஜ வாழ்வில் எத்தனையோ 'சசிகள் ' இருக்கிறார்கள்!

ஆனால் தியேட்டர்களில் அப்படி ஒன்றும் கூட்டத்தைக் காணவில்லை. See this ஒன்னும் பகுத் தொட்ட
காரியம் நஹி! ஏமிரா, சால நல்லா இருக்கீங்களா?

தலை கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறீங்களா?!.....................எங்கு போனாலும் சமாளித்துக் கொள்ளத் தெரியும் என் உதவியாளருக்குக் கூட. What big deal?









22 Oct 2012

கரும்பலகை!


என்ன வேலை கரி அடுப்பு ரூமுக்குள்ளே, என்று சத்தம் போடுகிறாள் அம்மா. இந்த அம்மாவுக்கு எப்படிதான்  தெரிகிறதோ,  பூனை மாதிரி அடிமேல் அடி வைத்துதான் நான் இங்கே வந்தேன். ஒன்னும் இல்லைம்மா, சும்மாதான் என்கிறேன். நெய்வேலி நிலக்கரி மூட்டையையும், மரக்கரி அடுப்பையும் நோட்டம் விட்டுவிட்டு, நான்கு பெரிய மரக்கரி உருண்டைகளை  பழைய     பேப்பரில்  பொட்டலம்      மடித்து  பாவாடைக்குள் மறைத்துக் கொண்டு  தோட்டத்திற்கு ஓடினேன்.

நல்லவேளை அம்மா பக்கத்துவீட்டுப் பாட்டியம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாள். ஆயிற்று, அடுத்தாற்போல் அந்தக் காய் காய்க்கும் குப்பைமேனிச் செடியைக் கண்டு பிடித்து இலையையும், காயையும் பறித்துக் கொள்ளவேண்டும். தெரு ஓரங்களிலே சர்வ சாதாரணமாகக் காணப்படும் செடிதான்!

செடியிலிருந்து இலைகளையும், காயையும் பறித்தாகிவிட்டது. அதையும் கையோடு கொண்டுவந்த பேப்பரில் சுற்றி, தோட்டத்துக் கரிப் பொட்டலத்தோடு சேர்த்து வைத்தேன். இப்போது ஏதாவது செய்தால் அடி விழும், பக்கவாத்யமாகத் திட்டும் கிடைக்கும். கொஞ்சம் பழைய கிழிசல் துணி பைக்கடியில் ஒளிந்து கொண்டது. அம்மாவுக்கு சந்தேகம், என்ன, சுத்தி சுத்தி வரே? ம், என்ன என்கிறாள்.

அம்மா, உனக்குப் பிடித்த பாட்டுப் பாடட்டுமா? நீ சொல்லிக் கொடுத்த தேவாரம்  மனப்பாடமாகிவிட்டது. அம்மா சந்தோஷமாகக் கேட்கிறாள்.
காலையில் வெகு வேகமாக ஸ்கூலுக்கு கிளம்பி ஓடிவிட்டேன். வகுப்பறை திறந்துதான் இருந்தது. இன்னும் யாரும் வரவில்லை. கொண்டுவந்த கரி, இலைகளை எடுத்துக்கொண்டு பள்ளித் தோட்டத்தில் உள்ள கருங்கல்லில் கரி, இலைகளைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கல்லால் அழுத்திப் பொடித்துக் கூழாக்கி, பேப்பரில் போட்டு எடுத்துக் கொண்டு   வெளுத்துக் கிடந்த கரும்பலகையை தண்ணீரால் துடைத்துவிட்டு கரி இலைச்சாறை கரும்பலகையில் அழுத்தித் தேய்த்து, காய்ந்தவுடன் திரும்ப ஒரு தடவை! மற்றும் சில மாணவியரும் கூடச் சேர்ந்து கொள்கிறார்கள். அற்புதமான அந்தக் கருத்த கரும்பலகையைப்பார்த்த போது என்ன திருப்தி, சந்தோஷம்.

தரையைப் பாழ்செய்து விழுந்திருந்த கரித்தூள்களை எடுத்து எறிந்து, தண்ணீரால் துடைத்து முடிவதற்குள் பெல் அடித்து விட்டது. தோட்டத்துக்கு ஓடிப் போய் கையைக் கழுவினால் கரிக் கருப்பு போனால்தானே? கை நகமெல்லாம் கருப்பு! அப்படியே பாவாடையில் துடைத்தேனா, பாவாடையெல்லாம் கருப்பு.வீட்டுக்குப் போனவுடன் இருக்கிறது மண்டகப்படி!

வகுப்புக்குள் நுழைகின்றார்  கணக்கு டீச்சர். கன்னங்கரேல் என்ற கரும்பலகையைப்  பார்த்தவுடன்   அவருக்கு ஒரே சந்தோஷம். எப்படியாவது அம்மாவை சரிக்கட்டி ஒரு 'டஸ்டர்' தைத்து விடவேண்டும் என்று தீர்மானித்துக் கொள்கிறேன்.  பாவாடை அழுக்கும், கைக்கரியும் மறந்தே போய் விட்டது!

(அப்போதெல்லாம் வகுப்பு லீடர் கிடையாது. எல்லோருக்கும் வகுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு உண்டு. சாதி, மதம் என்பது தெரியாமல் பள்ளியில் படித்த அந்த நாட்களின் நினைவுக் குவியலிலிருந்து  ஒரு துளி)

 




20 Oct 2012

கூட வந்த அனுமார்

இன்றைக்குக் காலையிலே திடீரென்று ஒரு ஆசை வந்து விட்டது! பெங்களூர், வசந்தநகர் அனுமார் கோவிலுக்குப் போகவேண்டும் என்பது தான் அது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருந்தோம். சிறிய கோவில், சுற்றிலும் மரங்களோடு அமைதியாய் இருக்கும் சூழ்நிலை, ராமநாமம் எப்போதும் ஒலிக்க, ஆரத்தி நேரம் சிலிர்க்க வைக்கும். மாலையில் வசந்தநகர் சென்று, காய்கறிகள் வாங்கிக்கொண்டு சரியாக ஏழு மணிக்கு உள்ளே சென்றுவிடுவோம்.பிரசாதம் பெற்றுக் கொண்டு வரும் வழியில், தெரு முனையில் இருக்கும் தொலை பேசியையும் உபயோகப் படுத்திய பின் வீடு திரும்பிய நாட்களை மனம் எண்ணிப் பார்க்கிறது.

காலையில் போக முடியவில்லை! மாலை 5 மணிக்கு ஆட்டோவில் ஏறினோம். என்ன போக்குவரத்து!
அப்பாடா,வெகு வேகமாய்ப் போய் சிக்னலில், நகராத நெரிசலில், டீசல், பெட்ரோல் புகை நடுவில்!
பேருந்துகள் புகமுடியாத இடைவெளிகளில் புகும் மோட்டார் வாகனங்கள், இடையே நுழையும் சிறு கார்கள், குறுக்கும் நெடுக்குமாய், சுற்றிவளைத்துப் புகுந்து போகும் இரு சக்கர வாகனங்கள்! இவற்றுக்கு இடையே 10, 12 வயது பையன்கள் இருவர் சைக்கிளில் புகுந்து புகுந்து சிரிப்பும், உல்லாசமுமாய்  என்னை பயமுறுத்தினார்கள். இளங்கன்று பயமறியாது.  நிஜமாகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போனோம். ஆட்டோக்காரர் கன்னாபின்னா என்று ஓட்டி, பத்திரமாகப் போய்ச் சேர்ந்தால்  போதும் என்று செய்துவிட்டார்.

ஆறேகால் மணிக்கு கோவிலை அடைந்தோம். எப்போதும் போல் ஆஞ்சனேயர் ஆனந்தமாய் தரிசனம் கொடுத்துக் கொண்டு இருந்தார். அவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு, வலம் வந்து பிரசாதத்தோடு ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தோம்.
என் கணவர் சொல்வார், 'ஏம்மா, பக்கத்தில இருக்கிற முருகன் கோவிலுக்கு வேண்டிக் கொள்ளக் கூடாதா. அது என்ன திருச்செந்தூர், எப்போதும்'?
நான் சொல்வேன், வைத்யநாதன் என்றபெயரில் ஊர் உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் பிறந்ததில் இருந்து முகம் பார்த்துச் சிரித்து, உரிமையோடு என்னை வளர்த்து ஆளாக்கிய என் தந்தையைத் தான் ஏதாவது வேண்டுமானால் கேட்கமுடியும். பக்கத்துத் தெருவில் அதே பெயருடைய வைத்திய நாதன் என்பவரைக் கேட்க முடியுமா? 

அது போலதான் எனக்குப் பிடித்தவன், என்மனத்தைத் திறந்து பேசவைப்பவன், என்னை நெகிழச் செய்பவன் அந்தச் செந்தில்நாதன்தான்! வருடத்துக்கு ஒரு முறையாவது அவனைப் பார்க்க வேண்டாமா? என்பேன்.
அதையேதான் இப்போதும் சொல்கிறேன். பக்கத்திலேயே இருக்கும் அனுமார் கோயிலுக்கு எல்லோரும் வர, போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் நேரத்தில்  எதற்கு வசந்தநகர் போகவேண்டும்? என் உள்ளம் கவர்ந்தவர் வசந்தநகர் அனுமன்தான். நான் என்ன செய்யட்டும்? சொல்லுங்கள்!

திரும்ப வரும்போதும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, ஆட்டோக்காரர் அசுர வேகத்தில் வண்டியை ஓட்ட,   பயந்து  நடுங்கிக் கொண்டு முன்னே பார்த்தால்.......

 ஆட்டோவில் அனுமன் கையில் கதையோடும், சஞ்சீவி மலையோடும், கயிற்றில் தொங்கிக் கொண்டு வந்தார்! பத்திரமாக எங்களை வீட்டில் விட்டார். உண்மைதாங்க!இது வரையிலும் நிறைய ஆட்டோக்களில் பயணித்திருக்கிறேன், எந்த ஆட்டோவிலும் பொம்மைகளைப்  பார்த்ததில்லை. மியூசிக் சிஸ்டம்தான் இருக்கும். நீங்கள் என்றாவது இந்த ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தால் மீண்டும் இந்த வலைப் பதிவைப் படியுங்கள்!

ஶ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்!


15 Oct 2012

நவராத்திரி

                         இன்று மஹாளய அமாவாசை. நவராத்திரி, தசரா என்றும், பொம்மைக்கொலுப் பண்டிகை என்றும் காலம் காலமாகக் கொண்டாடப்படும் சக்திவழிபாடு தொடங்குவதற்கு ஆயத்தம் செய்யும் நாள். வீடுகளிலே பரம்பரையாக வைக்கப்படும் கொலுப் பொம்மைகளை ஐந்து, ஏழு எனப்படிகள் அமைத்து வைத்து துர்கை, இலக்குமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியரை வழிபடும் காலம்.

என்னங்க, அட்டத்தில இருக்கிற கொலுப் பெட்டிய எல்லாம் கீழே எறக்கிவச்சுட்டு ஆபீசுக்குப் போவீங்களாம், சரியா?
சரி, சரி அந்தச் சின்ன மர ஏணியைக் கொண்டா என்கிறார் சிவன். அவருடைய இரண்டு குழந்தைகளும் உதவி செய்ய ஆஜர். ஒரு பெரிய இரும்புப் பெட்டி, இரண்டு அட்டைப் பெட்டிகள், ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பா. அம்புட்டுதான்.

அம்மா, நாந்தான் பார்க், மலை, கிராமம் எல்லாம் செய்வேன் என்கிறான் பிள்ளை.
நாந்தான் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்வேன், இந்தவாட்டி வயல், மரம் வைத்து 'க்ரீன் ப்ளேனட்' செய்வேன், அவன் என்னோட சண்டை போடக்கூடாது, இது பெண்.

என்ன சொன்னேன் நான்? சண்டை போடாம ரெண்டுபேரும் என்ன வேணுமினா செய்யலாம்! ஓ.கே?
இன்னிக்கு படி கட்டப் போறோம், அதனால சீக்கிறமா குளிச்சுட்டு வருவீங்களாம், சரியா?........

அரிசி, பருப்பு வகைகள் என வருடசாமான்கள் உள்ள பெரிய டின்களிலிருந்து பத்து நாட்களுக்கு வேண்டியவற்றை சின்ன டப்பாக்களுக்கு மாற்றி, டின்கள் எல்லாம் வாசல் ரூமில். மரப்பலகைகள், பழைய தினசரித்தாள்கள், பழைய வேஷ்டிகள், பட்டுப் புடவை என எல்லாம் ரெடி!

சுத்தமாக ஒட்டடை அடித்து, துடைத்த இடத்தில் கிழக்கு மேற்காக டின்களை அடுக்கி,மேலே பலகைகள்! அதன் மேலே தினசரித் தாள்கள், கீழே விழாமல், மடித்து ஒட்டி, அதன் மேல் பழைய வேஷ்டிகள். பக்கவாட்டில் டின்கள் தெரியாமல் மறைத்துக் கட்டி, படிகள் மேல் பட்டுப் புடவை சரிகை பார்டர் தெரியுமாறு செய்து, ஆங்காங்கே காயிதப் பூக்களை ஒட்டியாயிற்று.

பித்தளைச் செம்பு பளபளக்க, மஞ்சள் குங்குமம் வைத்து, ஏலம், பச்சைக்கற்பூரம் உள்ளே இடப்பட்டு, தண்ணீர் நிரப்பி, மாவிலைக் கொத்தை வைத்து அதன் மேல் மஞ்சள்குங்குமம் பூசிய அழகிய தேங்காயைக், குடுமி மேலே தெரியுமாறு வைத்து, பொன்னாபரணம் சூட்டி மேல்படியில், நடுவே வைத்து அம்மனை கலசத்தில் ஆவாகனம் செய்தாயிற்று.

அம்மா முதலிலே விநாயகர் தானே?யானை சாமி!
பார்த்தாயா, யானை வலிமை உடையது. கூடி வாழும் இயல்புடையது. அது போல நமக்கு எத்தனை துன்பங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெற சக்தியைக் கொடு, கூடிவாழும் நல்ல மனதைக் கொடு என்று கேட்பதற்காக முதலில் விநாயகர்.  அடுத்தது வள்ளி தெய்வானையோடு முருகன்!

ராமர் சாமி அவங்க அப்பா காட்டுக்கு, போ அப்பிடின்னு சொன்னதும் எதித்துப் பேசாம சரின்னு சொல்லிட்டார் இல்லியாம்மா? சீதாம்மா பொறுமையோட எந்தக் கஷ்டம் வந்தாலும் சரின்னு கூடப் போனாங்க. அனுமார்னா பக்தி, சரியாம்மா?
தசாவதாரங்கள்! பரிணாம வளர்ச்சிக்கு சாட்சியாய், ஒவ்வொரு அவதாரத்தையும் ஒரு கற்பனைக் கதையாய், சொல்லியுள்ள திறமை வியப்புக்குரியது!
ஒவ்வொரு பொம்மையிலும் ஒரு புராணக் கதை மாதிரி, ஒவ்வொன்றையும் வாங்கிய இடம் வருடம் எனக்
கதை சொல்லும் பொம்மைகளை எல்லாம் வைத்து, செட்டியார் கடையும் வைத்தாகிவிட்டது. கொலு ரெடி! வண்ணவிளக்கு அலங்காரமும் முடிந்தது.

குழந்தைகள் இருவரும் மணலைக் கொண்டு வந்து கொட்டி, பூங்கா, மலைக் கோவில், மிருகக்காட்சி சாலை, கிராமம் என நினைத்து நினைத்து ஒவ்வொன்றாகச் செய்து குச்சிகளால் வேலி கட்டினார்கள்.

வண்ண நிறப்பொடிகளால் கோலம் வாசலையும், கொலுவையும் அலங்கரிக்க,மாவிலைத் தோரணங்களால் விழாக்காலம் பூண்ட வீடு!

அம்மா நான்தான்  எல்லோருக்கும் வெற்றிலை, பாக்கு கொடுப்பேன். அண்ணா பிரசாதம் கொடுப்பான், நீ சந்தனம், குங்குமம் கொடு.

பத்து நாட்களும் காலையில் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, மாலையில் சவுந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி, பிற ஸ்துதிகள்! குழந்தைகளின் சங்கீதாஞ்சலி, பாயச, சுண்டல் பிரசாதங்கள். உறவினர், நண்பர்கள் என ஒருவறை ஒருவர் சந்தித்து, செய்திப் பரிமாற்றங்கள் செய்து மகிழ்ந்து, போவது தெரியாமல் பறக்கச் செய்யும் பண்டிகை.

மனம் லேசாகும், ஒரு நிம்மதி, சந்தோஷம், எனக் குடும்பம் முழுதும் ஆனந்திக்கும்! இதுதான் தசரா கொண்டாடுவதின் அடிப்படை நோக்கம். வழிபாட்டிற்காக பத்து நாட்கள்! முழு மனதோடு செய்தால் வருடம் முழுவதும் சந்தோஷம் கிடைக்கும்.

பிரபஞ்சம் முழுவதும் அவளுடைய சன்னிதி, சூரிய, சந்திரர்கள் தீபங்கள். வான விதானத்தின் கீழே அமர்ந்து, வாயு சாமரம் வீச, ஆர்ப்பரிக்கும் கடலலைகளின் நடனத்தைக் கண்டு, ஆணந்திக்கிறாள் அன்னை பராசக்தி!
அம்மா, அம்மா என்று உன்னைத் தேடி, இந்த  உடற்சிறையிலிருக்கும் உயிர்க் கிளியானது உள்ளம் நொந்து குழைகின்றது அம்மா!
மழைக்கு நடுங்கும் சிறுகுயில் போல, இந்த வாழ்க்கையின் இன்பம், துன்பம் என்ற உணர்வுகளில்   உழன்று   உன்னை அழைக்கின்றேன் அம்மா!
அறியாச் சிறுமியாம் எனக்கு உன் அருளைத்தர வருவாய்.
அம்மா, செந்தமிழ்த் தேன் பொழியும் நாவு வேண்டும்.
யார் வந்து கேட்டாலும் இல்லை எனச் சொல்லாமல் செல்வம் பொழியும் கைகள் வேண்டும்.
துன்பப் படும் மாந்தரைச் சாய்த்துக் கொள்ளும் வலிமை மிக்க தோள்கள் வேண்டும்.
பந்தங்கள் இல்லாத மனம் வேண்டும்!
உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் அன்னையே!
என் வாழ்க்கையை உன் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன் அன்னையே, அருள் மழை பொழிவாய்!












14 Oct 2012

மரமல்லி நினைவுகள்

மல்லிகைப் பூக்களிலே பல வகைகள். குண்டு மல்லி, ஜாதி, முல்லை, பிச்சி, ராமபாணப்பூ என வடிவத்திற்கும், மணத்திற்கும் தக்கவாறு பெயர்கள் மாறும். இவை எல்லாமே கொடியில் பூப்பவை. மர மல்லிக்குப் பெயர்க் காரணமே சொல்லத் தேவையில்லை. நெடிதுயர்ந்து நிற்கின்ற மரம், அதிலே நீண்ட காம்புடன் கூடிய  மூன்று தனி இதழ்களும், சற்றே நடுவில் பிளவுபட்டுக் காணும் ஓரிதழுமாய்,கொத்துக் கொத்தாய்ப் பூத்து மணம் பரப்பும். இந்த மலருக்கு புதுச்சேரி அன்னை திருவுருமாற்றம் எனப்பெயர் சூட்டினார். இதன் தாவரப் பெயர் Millingtonia hortensis என்பதாகும். இதன் ஆங்கிலப் பெயர் Indian cork Tree, Tree Jasmine என்பதாகும். மனித மனத்தைத் தாழ்ந்த நிலையிலிருந்து உயரிய நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் இருப்பதால்தான் அன்னை இம்மலரை திருவுருமாற்றம்  என அழைத்தார்.

முதன் முதலில் என் தந்தையார் என்னைச் சேர்த்த பள்ளி சேலம் நகரிலே புகழ் பெற்ற, செயிண்ட் மேரீஸ் உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியின் நடுவே அணிவகுத்து நிற்கும் வீரர்களைப் போல   இருபுறமும் வானளாவி வளர்ந்து, நறுமணம் பரப்பி, மலர்க் கம்பள வரவேற்பு நல்கும் மரமல்லி மரங்கள். பள்ளியின் உள்ளே நுழைந்தால் வகுப்பறையுள், புத்தகப் பையை வீசிவிட்டு மரமல்லி மலர்களைச் சேகரித்து, நீண்ட காம்புகளைப் பின்னி, மாலையாக்கி, ஓடிச்சென்று நிற்பது அன்னை மேரியின் மலைக் கோவில் முன்னே.

அன்றைக்குப் போலவே 58 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும், சுற்றுப் புறச்சூழல்களால் பாதிக்கப்படாத, பிரார்த்தனை அலைகளால் நிரப்பப்பட்ட, நிர்மலமான நீலவானம் சாட்சியாக நிற்கும் அக்கோவிலின் முன் கருணைவடியும் திருமுகத்தில் புன்னகையோடு அன்னையை தரிசித்த போது என் மனம் அமைதியில் ஆழ்ந்தது.

அன்று இருந்த கூரைக்கொட்டகை வகுப்பறைகள் எல்லாம் செங்கற்கட்டிடங்களாகக் காட்சியளிக்க
வகுப்பறைகளின் வாசலிலே அமர்ந்து படித்துக் கொண்டிருந்த மாணவியரிலே என்னையே மீண்டும் கண்டேன்.

என்னுடன் படித்த செபாஸ்டியானா என்ற மாணவி இறைப் பணிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சிஸ்டர், உடன் உயிர்த் தோழி வசந்தா. இன்றைக்கு உறவுகளைவிட, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத, நட்பு வாழ்க்கையை உயிர்ப்பிக்கிறது. என்னுடைய சேலம் பயணம் என்னை  மீண்டும் ஓர் சிறுமியாக்கிய அற்புதத்தைச் செய்தது.

திருவுருமாற்றம் செய்யும் மரமல்லி மலர் எனக்கு மிகவும் பிரியமானது. நினைவுகளோடு இரண்டறக்கலந்தது. களிமண்ணைப் பிசைந்து, குயவன் பானைகளும், பிற மட்பாண்டங்களும்  செய்வது போல் கள்ளமற்ற குழந்தை மனங்களை தன்னம்பிக்கையுடன் கூடிய அறிவு ஜீவிகளாக்கும் பள்ளிக் கூடங்களின் பணி மகத்தானதாகும்.



இப்பணியை கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்து வரும் செயிண்ட் மேரி பள்ளிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.


27 Sept 2012

அம்மா, தாயே!

'மாதம்தோறும் கணவன்மார்கள் தங்கள் வருமானத்தில் ஒரு தொகையை இல்லத்தரசிகளுக்கு சம்பளமாகத் தர வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒரு யோசனையைத் தெரிவித்து இருக்கிறது.' இது செய்தி!

நல்ல யோசனை- மொத்த சம்பளமும் எங்க கைக்கே வந்தா பரவாயில்ல; முதல் மாச சம்பளத்த அம்மாக்காரி கையில கொடுக்கலாம்னா, அடுத்த மாதத்தில இருந்து பெண்டாட்டி கையில கொடுத்தா என்ன தப்பு? என்று மாமியார் எதிரிக் கட்சியிலிருந்து ஒரு மருமகப் பொண் எழுதி இருக்கு.

அடிப்படை சம்பளம், தன்பிறந்த வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததற்கான இழப்பீட்டுத் தொகை, தான் கொண்டுவந்த வெள்ளி, தங்கத்துக்கான  வட்டி, படித்ததற்கான செலவில் ஒரு சதவிகிதம், ஒரு தாயாக, மனைவியாக, சமையல் மற்றும் பிற வீட்டு நிர்வாகம் செய்வதற்கான   ஊதியம்   இதையெல்லாம்  இல்லத்தரசி   கேட்கலாம்.   என்ன   பேராசை!

சரிதான் மனைவியும் நல்ல சம்பளம் வாங்குபவராக இருந்தால் கணவன், வீட்டு வாடகை, வீட்டுச் செலவில் பாதி, இவற்றைக் கேட்டு வாங்கலாம். [கொடுத்தால்]

அட, புருஷன் கிட்ட சம்பளம் வாங்க பெண்டாட்டி என்ன வேலைக்காரியா, விபச்சாரியா?
ஒரு மனைவியாக, தாயாக இருக்க சம்பளமா? 
ஆமாங்க, மாங்கு மாங்குன்னு காத்தால இருந்து, ராத்திரி படுக்கற வரை உழைச்சாலும் என்ன லாபம்? 
ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு மூவாயிரம் ரூபாயை, மாதம்தோறும் கொடுக்க முடியுமானால் மனைவிக்கு சம்பளம் கொடுப்பதில் என்ன தப்பு? என்று கேட்கிறது ஒரு இளம் மனைவியர் கூட்டணி!

Are you a Housewife? என்ற கேள்வி சர்வ சாதாரணமாகக் கேட்கப்படுவதுதான். அது என்ன House wife, office wife? அப்பிடீன்னு இருக்கா என்ன? I am a Home maker, னு  சொன்னேன் என்றாள் செல்வி.
இது ஆங்கில மோகத்தால் வந்தது. தமிழ் மொழியைப் பாருங்கள்! வாழ்க்கைத் துணை நலம், இல்லாள், இல்லத்தரசி என்று ஒரே அடியாக பெண்களைப் பெருமைப் படுத்துகிறது.

இன்றைக்கு வாழ்க்கைத் துணை நலமாயிருப்பவர்களை விட, இல்லத்தரசிகள் தான் அதிகம். என்றைக்கு பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றார்களோ அன்றிலிருந்து நம்முடைய கலாச்சாரம் மாறிக்கொண்டு வருகிறது. 

பாருங்களேன், காஷ்மீரிலிருந்து, கன்யாகுமரிவரை யார் நாட்டை ஆள்கிறார்கள்? என்னதான் ஆண்மகனானாலும் ஒரு கேலிச் சித்திரமாவது பயப்படாமல் வரைய முடியுமா? தைரியமாகப் பேச முடியுமா?

'மூன்று முடிச்சு' போட்டாலும், 'இரு கோடுகளும்' ஒன்றுக்கொன்று மதிப்பும் மரியாதையும் கொடுத்து, இணைகோடுகளாய் இருந்தால்தான் 'வாழ்க்கை', 'கல்யாணப்பரிசாக', 'அன்னை'யென்னும் 'தங்கப்பதக்கத்தைக்' கொடுத்து, வாழ்த்தும்.

 உருப்படியில்லாத யோசனைகளைத் தெரிவிக்காமல் புத்திசாலித்தனமான, ஆக்கபூர்வமான யோசனைகளை அமைச்சகங்கள் தெரிவிக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

ஆ, ஒரு விண்ணப்பம்! பேசாமல் அரசாங்கமே எல்லா இல்லத்தரசிகளுக்கும் சம்பளம் கொடுத்தா என்ன?